ஈரோட்டில் திமுக-வை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்… முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ பங்கேற்பு!

 

ஈரோட்டில் திமுக-வை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்… முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ பங்கேற்பு!


ஈரோடு

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, ஈரோட்டில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்ட ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டைன், கே.சி. கருப்பணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும், அதிமுக-வினர் மீது போடப்படும் பொய்யான வழக்குகளை கண்டித்தும், அதிமுக சார்பில் ஈரோட்டில் இன்று பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோபி குள்ளம்பாளையத்தில் முன்னாள் அமைச்சரும், கோபி எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.செங்கோட்டையன் தனது வீட்டின் முன்பு பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதில், முன்னாள் எம்.பி. சத்தியபாமா உள்ளிட்டோர் கலந்துகொண்டு திமுக நீட் தேர்வை ரத்து செய்யவும், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஈரோட்டில் திமுக-வை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்… முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ பங்கேற்பு!

இதேபோல், கவுந்தப்பாடியில் முன்னாள் அமைச்சரும், பவானி எம்.எல்.ஏ.வுமான கே.சி.கருப்பணன், அவரது வீட்டின் முன்பு கட்சியினருடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வீரப்பன்சத்திரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். கருங்கல் பாளையம் செக்காய்தோட்டம் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு தலைமை தாங்கினார். இதேபோல், பெருந்துறை தொகுதிக்குட்பட்ட 110 இடங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் உரிமை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோட்டில் திமுக-வை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்… முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ பங்கேற்பு!

பெருந்துறை தொகுதி எம்எல்ஏ அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ ஜெயக்குமார், வாய்க்கு வந்தவாறு வாக்குறுதி அளித்து மக்களின் வாக்குகளை பெற்றிருக்கும் திமுக, ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதிகளை பற்றி வாய் திறக்காமல் இருப்பதாக கூறி, கண்டன கோஷங்களை முழங்கினார். முன்னாள் எம்எல்ஏ-க்கள் கே.எஸ்.பழனிச்சாமி குன்னத்தூரிலும், டாக்டர் பொன்னுசாமி, பொன்னுத்துரை ஆகியோர் பெருந்துறையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தனர்.