‘ஆளுநரால் மருத்துவ கலந்தாய்வு தாமதம்’ – முதல்வர் நாராயணசாமி தகவல்!
புதுச்சேரியில் ஆளுநரால் மருத்துவக் கலந்தாய்வு தாமதம் ஆவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு சட்டம் இயற்றியதை தொடர்ந்து, புதுச்சேரியில் 10% ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. உள் ஒதுக்கீட்டுக்கு அனுமதி அளிக்காமல் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக காலம் தாழ்த்தி வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால், அண்மையில் ஒப்புதல் வழங்கினார். அதன் படி, நடப்பாண்டு மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்பட உள்ளது. ஆனால், புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி மருத்துவ ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்காமல் கோப்பை மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் டெல்லியில் நிதியமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி, ஆளுநர் ஒப்புதல் தராததால் மருத்துவ கலந்தாய்வு தாமதமாகிறது என தெரிவித்துள்ளார். 10% ஒதுக்கீட்டுக்கு உடனே ஒப்புதல் தரப்படும் என மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ்வர்தன், பொக்ரியால் உறுதியளித்ததாகவும் ஜிஎஸ்டி இழப்பீடு தொகை ரூ.798 கோடி வழங்க நிதியமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார்.