கடன் தொல்லையால் வாகன வியாபாரி தூக்கிட்டு தற்கொலை… திருவாரூர் அருகே சோகம்!

 

கடன் தொல்லையால் வாகன வியாபாரி தூக்கிட்டு தற்கொலை… திருவாரூர் அருகே சோகம்!

திருவாரூர்

திருவாரூர் அருகே கடன் தொல்லையால் பழைய வாகனங்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(31). இவர் இருசக்கர வாகனம் உள்பட பழைய வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி உமா என்ற மனைவியும், 10 மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், சதீஷ்குமார் தொழில் தொடர்பாக பல்வேறு நபர்களிடம் கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஆரம்பத்தில் முறையாக தவணை செலுத்தியும் வந்துள்ளார்.

கடன் தொல்லையால் வாகன வியாபாரி தூக்கிட்டு தற்கொலை… திருவாரூர் அருகே சோகம்!

இந்த நிலையில், பொதுமுடக்கம் காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டதால் கடந்த சில மாதங்களாக தவணை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் அவர் கடும் மன உளைச்சலுடன் காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சதீஷ்குமார், நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலின் பேரில் திருவாரூர் டவுன் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் தொல்லையால் வாகன வியாபாரி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.