அம்பத்தூரில் வயது முதிர்ந்த தம்பதி கொரோனாவுக்கு பலி!
சென்னை
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வயது முதிர்ந்த தம்பதி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அம்பத்தூர் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வருபவர் நந்தகோபால்(80). இவர் அம்பத்தூர் பகுதியில் பேப்ரிகேஷன் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி கற்பகம் (71). இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் தம்பதியினர் இருவருக்கும் சளி, காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.
இதனையடுத்து, மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்த நிலையில், தம்பதியினர் இருவரும் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 22ஆம் தேதி அன்று தம்பதியினருக்கு உடல் நிலை மோசமடைந்தது. இதனால் உறவினர்கள் அவர்களை மீட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் நந்தகோபால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரை தொடர்ந்து, சிறிது நேரத்திலேயே கற்பகமும் உயிரிழந்தார். கொரோனாவால் அடுத்தடுத்து தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.