உயிரைப் பறிக்கும் சுய மருத்துவம்… வேண்டாம் விபரீத விளையாட்டு

 

உயிரைப் பறிக்கும் சுய மருத்துவம்… வேண்டாம் விபரீத விளையாட்டு

இன்றைக்கு அனைவரின் கையிலும் மொபைல் போன், இன்டர்நெட் வந்துவிட்ட பிறகு யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் எளிதில் தெரிந்துகொள்ள முடிகிறது. அதிலும் குறிப்பாக மருத்துவ பிரச்னை தொடர்பாக தேடுவது அதிகரித்துவிட்டது. இவர்களை மகிழ்விக்கும் வகையில் நொடியில் பல் கரை மறைந்துவிடும், ஒரே வாரத்தில் முடி முளைத்துவிடும் என்று பல தவறான பதிவுகள் யூடியூப் உள்ளிட்டவற்றை ஆக்கிரமித்து வருகிறது.

உயிரைப் பறிக்கும் சுய மருத்துவம்… வேண்டாம் விபரீத விளையாட்டு

தலைவலி, காய்ச்சல் வந்தால் கூட தனக்கு இதனால்தான் இந்த பிரச்னை வந்தது என்று தாங்களாக ஒரு முடிவுகட்டி, அதற்கு மருந்து எடுத்துக்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது. கூகுள் துணையுடன் ஒவ்வொருவருமே டாக்டர் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். பல மருத்துவமனைகளில் கூகுளில் பார்த்துவிட்டு கேள்வி கேட்கக் கூடாது என்று போர்டு மாட்டும் அளவுக்கு சுய மருத்துவம் சென்றுகொண்டிருக்கிறது.

சுய மருத்துவத்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் பற்றி பார்ப்போம்…

சரியான நோய் கண்டறிதல் இல்லை

தலைவலிக்கும் காய்ச்சலுக்கும் நூற்றுக்கணக்கான காரணங்கள் உள்ளன. மேலும் இது வெறும் அறிகுறிதான். நோய் இல்லை. எனவே காய்ச்சல் வந்தாலே நமக்கு டெங்கு, மலேரியா, கொரோனா என்று முடிவுகட்டிக்கொண்டு சுய மருத்துவம் எடுப்பது பாதிப்பில்தான் முடியும்.

இணையத்தில் நமக்குள்ள அறிகுறிகளை போட்டு அதன் அடிப்படையில் தேடுவது சரியான தீர்வாக இருக்காது. காய்ச்சல் 2 – 3 நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். இல்லை என்றால் பிளேட்லெட் எண்ணிக்கை குறைவு. சுவாசப் பாதையில் நோய்த் தொற்று முற்றிய நிலை போன்ற சிக்கலில் கொண்டுபோய்விட்டுவிடலாம்.

உயிரைப் பறிக்கும் சுய மருத்துவம்… வேண்டாம் விபரீத விளையாட்டு

தவறான மருந்து எடுப்பது

யாருக்கு என்ன மாதிரியான மாத்திரை கொடுக்க வேண்டும் என்பது மருத்துவருக்குத்தான் தெரியும். நோயின் தீவிரத்தை உணர்ந்து எவ்வளவு டோஸ் எத்தனை நாட்களுக்கு என்பதை அவர் முடிவு செய்வார். சிலருக்கு வயிற்றுப் புண் பிரச்னை இருக்கும் அவர்களுக்கு மைல்ட் மாத்திரை, சிலருக்கு ஹெவி டோஸ் கொடுத்தாலும் வயிற்றைப் பதம்பார்த்துவிடாமல் இருக்கக் கூடுதல் மாத்திரை என அனைத்தும் மருத்துவர் பார்த்துப் பார்த்து கொடுப்பார். நாமாக இணையத்தில் பார்த்து இந்த நோய்க்கு இந்த மருந்து என்று எடுத்துக்கொள்வது நோய்க்கிருமி மருந்துக்கு கட்டுப்படாத நிலைக்கு கொண்டுபோய் விட்டுவிடும்.

அடிக்‌ஷனுக்கு கொண்டு செல்லலாம்

வலி நிவாரணிகள் எடுப்பது சிறுநீரகத்தை பாதிக்கும். கூடுதல் டோஸ் எடுத்தால் சிறுநீரகம் செயலிழந்துவிடும். பிறகு வாரத்துக்கு மூன்று நாட்களுக்கு டயாலிசிஸ்தான் செய்ய வேண்டியிருக்கும். அல்லது சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டும். சில மருந்துகள் போதை போல மீண்டும் மீண்டும் எடுத்தால்தான் நான்றாக இருக்கும் என்ற உணர்வு ஏற்படும். எனவே, நம்முடைய உடலைப் பாதுகாக்க சுய மருத்துவம் தவிர்ப்பது நல்லது.