தா.பாண்டியன் மறைவு : தலைவர்கள் இரங்கல்!

 

தா.பாண்டியன் மறைவு : தலைவர்கள் இரங்கல்!

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 89. சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக தொற்று காரணமாக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்தார். அவரது உடல் நாளை மதுரையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. சென்னை அண்ணாநகரில் இருக்கும் அவரது இல்லத்தில் இன்று மதியம் ஒரு 1 மணி வரை தா.பாண்டியன் உடல் வைக்கப்படவுள்ள நிலையில் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை தி.நகரில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இந்த நிலையில் தா.பாண்டியனின் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தா.பாண்டியன் மறைவு : தலைவர்கள் இரங்கல்!

துணை முதல்வர் ஓபிஎஸ்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.தா.பாண்டியன் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கும், அவர் சார்ந்த கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன்

பொதுவுடைமைத் தூணொன்று சாய்ந்தது. பற்பல விழுதுகள் பாய்ச்சிவிட்டு கம்யூனிஸ வேரொன்று வீழ்ந்திருக்கிறது. தோழர் தா.பாண்டியன் மறைவு தமிழர்கள் அனைவருக்குமே பொது இழப்பு.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்

பொதுவுடைமை இயக்கத்தின் தூண்களில் ஒருவராக விளங்கிய மாபெரும் போராளி மதிப்பிற்குரிய ஐயா தா.பாண்டியன் அவர்களின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு ஐயா தா. பாண்டியன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் கூறிக்கொள்கிறேன்.

விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி.

தோழர் தா.பா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
அவரது மறைவு ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்திற்கும் நேர்ந்த பேரிழப்பாகும். ஈழத் தமிழர்களின் நலன்களில் அக்கறையோடு பணியாற்றியவர். முற்போக்கு சிந்தாந்த தளத்தில் அவரது பங்களிப்பு மகத்தானது. அவருக்கு எமது #வீரவணக்கம்.