ஈரோட்டில் இறைச்சி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

 

ஈரோட்டில் இறைச்சி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

ஈரோடு

ஈரோடடில் நேற்று ஞாயிற்றுக் கிழமையையொட்டி இறைச்சி மற்றும் மீன்கடைகளில் இறைச்சி வாங்க அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஈரோடு மாவட்டம் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் 2-ம் இடத்தில் உள்ளது. இதனால் இன்று முதல் வரும் ஜூலை 5ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கில், மீன் மார்க்கெட்டுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், தனியாக இயங்கும் இறைச்சி கடைகள், மீன் கடைகள் சில கட்டுப்பாடுகளுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டு வருகிறது. நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

ஈரோட்டில் இறைச்சி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

மாநகர் பகுதியில் உள்ள சூரம்பட்டி, கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், சம்பத் நகர், சூளை போன்ற இடங்களில் உள்ள மீன், ஆட்டிறைச்சி கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியை கடைபிடித்து, வட்டத்தில் நின்று இறைச்சிகளை வாங்கி சென்றனர். மீன் கடைகளில் ரோகு, கட்லா, ரூபா, ஜிலேபி போன்ற மீன் வகைகள் அதிகளவில் விற்பனையானது.

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் உள்ள மீன் கடைகளில் நேற்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் மீன் வாங்க வந்தவர்களிடம் முகக் கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுரை கூறினார். மேலும், மாநகராட்சி சார்பில் அலுவலர்கள் ஆங்காங்கே மீன் கடைகள், இறைச்சிக் கடைகளில் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து கண்காணித்தனர்.