குடித்துவிட்டு தகராறு- மகனை வெட்டிக்கொன்ற தந்தை

 
murder

வருசநாடு அருகே மது குடித்துவிட்டு தினமும் தகராறில் ஈடுபட்ட மகனை அரிவாளால் வெட்டிக்கொன்ற தந்தையின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

murder

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள சிங்கராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழன். இவருக்கு 30 வயதில் ரிவன்ராஜ் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.  மகளுக்கு திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வந்தார். ரிவன்ராஜ் சிங்கராஜபுரத்தில் உள்ள வீட்டில் பெற்றோருடன் வசித்து வந்தார். ரிவன்ராஜுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.  தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் அடிக்கடி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ரிவன்ராஜ் மது குடித்துவிட்டும் கஞ்சா குடித்துவிட்டு போதையில் தனது பெற்றோரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தவிர வீட்டில் இருந்த ஒரு பசு மாட்டையும் விற்று ரிவன்ராஜ் ஊதாரித்தனமாக செலவழித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு போதையில் வீட்டிற்கு வந்த ரிவன்ராஜ் மீண்டும் தனது தந்தை தமிழனுடன் தகராறில் ஈடுபட்டார். அதன் பின்னர் அதிகாலையில்  வீட்டுத்திண்ணையில் ரிவன்ராஜ் படுத்திருந்தார். அடிக்கடி போதையில் தகராறில்  ஈடுபட்டு வரும் ரிவன்ராஜை கொலை செய்ய முடிவு செய்த தமிழன், அரிவாளை எடுத்து படுத்திருந்த ரிவன்ராஜை சரமாரியாக வெட்டினார். 

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரிவன்ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரிவன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து ரிவன்ராஜ் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வருஷநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து  பெற்ற மகனை அரிவாளால் வெட்டிக் கொன்ற தந்தை தமிழனை கைது செய்தனர். மகனை தந்தை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் சிங்கராஜபுரம் கிராம மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.