மீன் பிடிப்பதில் தகராறு- மகன் கண் முன்னே தந்தை வெட்டிக்கொலை
பெரும்பள்ளம் அணையில் மீன் பிடிக்க சென்ற போது மகன் கண் முன் தந்தை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பெரும்பள்ளம் அணையானது புலிகள் காப்பக எல்லையில் மலையடிவாரத்தில் அமைந்து உள்ளது. இந்த அணை மழை காலங்களில் மட்டுமே நீர் நிரம்பி இருக்கும். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக அணையில் ஓரளவு நீர் இருப்பதால் இங்குள்ள மீன்களை பிடித்து விற்பனை செய்யும் குத்தகை உரிமையை அதே பகுதியை சேர்ந்த 14 பேர் பெற்று உள்ளார். அணையில் உள்ள மீன்கள் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் பிடித்து சென்று விடுவதால், கே.என்.பாளையம் ரைஸ் மில் வீதியை சேர்ந்த பெரிய முத்தான் மகன் சக்திவேல்(55) என்பவரை காவல் பணிக்காக நியமித்து உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு கே.என்.பாளையம் நரசாபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் வேதனாண்டி என்கிற அய்யப்பன் (52) மற்றும் அவரது மகன் மாதேஸ்(30) ஆகியோர் பெரும்பள்ளம் அணையில் மீன் பிடிப்பதற்காக சென்று உள்ளனர். அப்போது அங்கு காவல் பணியில் இருந்த சக்திவேலுவிற்கும் அய்யப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் அவரது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த சவுந்திரராஜன் மற்றும் கவுதம் ஆகியோரை அழைத்து வந்து அய்யப்பன் மற்றும் அவரது மகன் மாதேசிடம் தகராறு செய்து உள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு அதிகரிக்கவே ஆத்திரமடைந்த சக்திவேல், மறைத்து வைத்து இருந்த அரிவாளால் அய்யப்பனையும் அவரது மகன் மாதேசையும் சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அய்யப்பன் உயிரிழந்த நிலையில் மாதேஸ் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார்.

இருவரையும் வெட்டிய கும்பல் தப்பியோடிய நிலையில் மாதேசின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சென்று மாதேசை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பங்களாபுதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அய்யப்பனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீன் பிடிக்க சென்றவர் மகன் கண் முன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


