ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! நாதக நிர்வாகி கைது
சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில செயலாளர். இவர் கிண்டி மடுவங்கரையில் சொந்தமாக ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது நிறுவனத்தில் கடந்த ஆறு மாதங்களாக பணியாற்றும் சேலையூரை சேர்ந்த 25 வயது இளம்பெண், குடும்ப அவசர தேவைக்காக சக்திவேலிடம் இரண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
இதையடுத்து இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இளம்பெண்ணை சக்திவேல் உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அவர் வர மறுக்கவே, தான் கொடுத்த இரண்டு லட்சத்தை உடனே தர வேண்டும் எனக்கூறி மிரட்டி உள்ளார். இது தொடர்பாக இளம்பெண் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சக்திவேலை கைது செய்து நேற்று இரவு சிறையில் அடைத்தனர். தனது நிறுவனத்தில் பணியாற்றும் மேலும் சில பெண்களிடம் இச்சையை தூண்டும் வகையில் பேசியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர். சக்திவேலின் செல்போன், லேப்டாப்பை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் தைரியமாக புகார் கொடுக்கலாம் என அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களிடம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.