நடு ரோட்டில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை- முதியவர் சிறையில் அடைப்பு
நடுரோட்டில் பெண்ணை வழிமறித்து பாலியல் கொடுத்த முதியவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை அயனாவரம் பகுதியில் வசித்து வரும் அந்தப் பெண் அதே பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். அப்பெண் கடந்த 3ஆம் தேதி அன்று அண்ணா நகரில் புதுமண்டபம் சாலை வழியாக நடந்து சென்றிருக்கிறார்.
அப்போது அந்த வழியாக வந்த 60 வயதுக்கு மேல் உள்ள நபர் ஒருவர் அந்த பெண்ணை வழிமறித்து ஆபாசமாக பேசி இருக்கிறார். ஆபாச செய்கை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அந்த நபர் போதையில் இருப்பதை புரிந்து கொண்ட அந்த பெண், அவரை தள்ளிவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்திருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், அங்கு கிடந்த கல்லை எடுத்து அந்த பெண்ணின் தலை தலையில் கடுமையாக தாக்கி இருக்கிறார்.
இதில் அந்த பெண் அலறி துடித்திருக்கிறார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவும் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார். அப்பகுதியினர் பெண்ணை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை நடத்தியதில் அந்த நபர் அண்ணா நகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 62 வயது கரிகாலன் என்பது தெரிய வந்திருக்கிறது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.