’’அவ என் காதலி நீ இனிமே பேசக்கூடாது.. ’’, ‘’அடேய்! அவ என் பொண்டாட்டிடா..’’
பிரிந்து சென்ற மனைவியை சேர்ந்து வாழ வற்புறுத்தி அழைத்து வர நினைத்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய முயன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம். இப்பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். மீனவரான இவர் அபிமுனிசா என்ற பெண்ணை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
குடும்ப பிரச்சனையினால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மணிமாறனை விட்டு பிரிந்து இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அதே பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார் அபிமுனிசா.
மணிமாறன் பலமுறை சென்று மனைவியை அழைத்தும் கூட குடும்பம் நடத்த வர முடியாது என்று மறுத்து வந்திருக்கிறார். பின்னர்தான் மணிமாறனுக்கு தகவல் தெரியவந்து இருக்கிறது. அவரது மனைவி அபிமுனிசாவுக்கும் திருவொற்றியூர் பூங்காவனபுரம்தைச் சேர்ந்த யுவராஜ் என்பவருக்கும் இடையே சில ஆண்டுகளாக கள்ள உறவு இருந்து வந்தது தெரிய வந்திருக்கிறது. யுவராஜ் -அபிமுனிசா இருவரும் கணவன் மனைவியாகவே வாழத் தொடங்கி இருக்கிறார்கள் என்ற தகவலும் மணிமாறனுக்கு தெரியவந்திருக்கிறது.
இதனால் பதறியடித்துக் கொண்டு போன அவர், மனைவியை சந்தித்து மீண்டும் என்னுடன் குடும்பம் நடத்தவா. அப்படி வர முடியாது என்றால் குழந்தைகளாவது என்னிடம் கொடுத்துவிடு என்று கேட்டிருக்கிறார். அதற்கு அபிமுனிசா, நான் யுவராஜுடன் தான் வாழ்வேன். குழந்தைகளையும் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லி இருக்கிறார்.
ஆனால் மீண்டும் மீண்டும் சென்று வற்புறுத்தி வந்திருக்கிறார் மணிமாறன். இந்த நிலையில் கடந்த வாரத்தில் திருச்சினாங்குப்பம் கடற்கரையில் மீன்பிடி வலைகளை சரி செய்து கொண்டு இருந்திருக்கிறார் மணிமாறன். அப்போது போதையில் சென்ற யுவராஜும் அவரது நண்பர் ராம்குமாரும் இனி அபிமுனிசாவிடம் இனிமேல் பேசக்கூடாது . அவள் என் காதலி என்று சொல்லியிருக்கிறார். அதற்கு மணிமாறன், அடேய்! அவள் என் பொண்டாட்டிடா என்று சொல்லி சத்தம் போட்டிருக்கிறார்.
இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் யுவராஜ், ராம்குமாரும் சேர்ந்து மணிமாறனை கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். அங்கிருந்த சுத்தியலை எடுத்து மணிமாறன் தலையில் அடித்திருக்கிறார்கள். இதில் பலத்த காயம் அடைந்து அலறியிருக்கிறார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் ஓடி வரவும் யுவராஜ், ராம்குமார் இருவரும் தப்பிவிட்டார்கள்
போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தேடி வந்ததில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த போது யுவராஜ், ராம்குமார், அபிமுனிசா மூன்றுபேரையும் போலீசார் கைது செய்தனர்.