கல்குவாரிக்கு சீல் வைக்க காரணமானவர் லாரி ஏற்றி கொலை
கல்குவாரிக்கு சீல் வைக்க காரணமானவர் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டிருக்கிறார். சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வரும் கல்குவாரி குறித்து புகார் கொடுத்ததின் பேரில் அந்த கல்குவாரிக்கு மூடி சீல் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கல்குவாரிக்கு எதிராக புகார் கொடுத்து விவசாயி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார். கரூர் பகுதியில் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கரூர் மாவட்டத்தில் குப்பம் கிராமம் அடுத்த காளிபாளையம் வெட்டுக்காட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். 52 வயதான இவர் விவசாயி. இவர் கருடம் காருடையாம்பாளையத்தில் இருந்து குப்பம் செல்லும் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த தனியார் கிரஷருக்கு சொந்தமான மினி லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பலியானார்.
தகவல் அறிந்த க. பரமத்தி போலீசார் ஜெகநாதன் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வந்ததில் முன் விரோதம் காரணமாக நடந்திருக்கலாம். இது கொலைதான் என்று உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
அப்பகுதியில் இயங்கி வந்த கல்குவாரி காலக்கெடு முடிந்தும் சட்டத்திற்கு புறம்பாக தொடர்ந்து செயல்படுவதாக கூறி ஜெகநாதன் கனிம வளத்துறையினருக்கு புகார் கொடுத்து இருக்கிறார். இந்த புகாரின் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் கனிம வளத்துறை அதிகாரிகள் அந்த குவாரியை இழுத்து மூடி சீல் வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில் தான் ஜெகநாதன் பைக்கில் சென்ற போது அவரை மினி வேன் மோதி உயிரிழக்க செய்து இருக்கிறது. இதனால் கல்குவாரியை மூட காரணமாக இருந்ததால் அவரை லாரி மோதி கொலை செய்துவிட்டனர் என்று உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதை அடுத்து கொலை வழக்கமாக பதிவு செய்யப்பட்டு கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் மற்றும் வேன் ஓட்டுநர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.