என்னை கழற்றி விட்டாள்.. அதனால் அழகான முகத்தை சிதைத்தேன்... பேஸ்புக் காதலன் வாக்குமூலம்
விமான பணிப்பெண் வேலை கிடைக்கப் போகிறது என்பதற்காக திடீரென்று என்னை கழற்றி விட்டு விட்டார். அதனால் அந்த வேலை அவருக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காக அழகான முகத்தை சிதைத்தேன் என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார் இளைஞர் நவீன். சாலையில் நடந்த சென்ற பெண்ணை மது பாட்டிலை உடைத்து முகத்தை சரமாரியாக கிழித்த வழக்கில் இந்த அதிர்ச்சி வாக்குமூலத்தை தெரிவித்திருக்கிறார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதான இளம் பெண் சோனு. இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விமான பணிப்பெண் பயிற்சிக்காக சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் தங்கி இருந்திருக்கிறார். இரவு பணி முடித்துவிட்டு கீழ்பாக்கம் அபு பேலஸ் ஹோட்டலுக்கு பின்புறம் உள்ள தனது விடுதிக்கு சென்று இருக்கிறார் . அப்போது இளைஞர் ஒருவர் திடீரென்று அப்பெண்ணை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் .
இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தன் கையில் வைத்திருந்த மது பாட்டிலை உடைத்து சோனுவின் முகத்தில் சரமாரியாக கிழித்து இருக்கிறார். அதன் பின்னர் பெண்ணை கீழே தள்ளி விட்டு ஓடி இருக்கிறார்.
கீழே விழுந்து அலறி துடித்த சோனுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முகத்தில் சோனுவின் முகத்தில் 25 தையல்கள் போடப்பட்டிருக்கின்றன. கீழ்ப்பாக்கம் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் நவீன் என்ற இளைஞர் சிக்கினார். வேப்பேரியைச் சேர்ந்த நவீனை போலீசார் பிடித்து விசாரித்த போது சோனுவின் பேஸ்புக் நண்பர் என்பது தெரிய வந்திருக்கிறது.
கடற்படையில் பணிபுரிவதாக பொய் சொல்லி சோனுவிடம் பேஸ்புக்கில் பழகி வந்திருக்கிறார். விமான பணிப்பெண் பயிற்சிக்காக சென்னை வந்த போது சோனுவை நேரில் சந்தித்து பழகி இருக்கிறார். இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்து இருக்கிறார்கள். நவீன் கடற்படை வீரர் இல்லை என்பதை தெரிந்ததும் நவீனை கழற்றி விட்டிருக்கிறார் சோனு. இதனால் ஆத்திரமடைந்த சோனு, விமான பணிப்பெண் கிடைக்க போகும் திமிரில் தன்னை கழற்றி விட்டு விட்டார் என்று ஆத்திரத்தில் இந்த செயலை செய்திருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.