வெளியே அக்கா, தம்பி- உள்ளே லிவிங் டு கெதர் ;கடைசியில் நிகழ்ந்த சோகம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுளா(வயது23). அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார்(வயது 21). இருவரும் தஞ்சாவூரில் வேலை பார்த்து வந்த போது பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியிருக்கிறது. வீட்டிற்கு தெரியாமல் இருவரும் ஒன்றாக வாழ ஆசைப்பட்டிருக்கிறார்கள். சென்னைக்கு சென்று விட்டால் அங்கே ஒரே இடத்தில் தங்கி இருந்து சந்தோஷமாக இருந்து கொண்டு வேலை பார்க்கலாம் என்று முடிவெடுத்து சென்னைக்கு வந்திருக்கிறார்கள்.
சிந்தாதிரிப்பேட்டையில் அக்கா- தங்கை தம்பி என்று சொல்லி வீடு வாடகைக்கு பிடித்திருக்கிறார்கள். பின்னர் சந்தோஷ் வீட்டுக்கு அருகிலேயே நூல் நெசவு கம்பெனியில் வேலை பார்த்து வந்திருக்கிறார். மஞ்சுளா கோயம்பேட்டில் கால் சென்டரில் வேலை செய்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் இருவரும் நன்றாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் சந்தோஷ்க்கு திடீரென்று மதுப்பழக்கம், கஞ்சா பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் தினமும் வீட்டில் வந்து சண்டை போட்டு இருக்கிறார். தான் நம்பி வந்த காதலர் இப்படியும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி விட்டாரே என்று கவலைப்பட்ட மஞ்சுளா பெங்களூரில் வேலை பார்த்து வந்த தனது முன்னாள் காதலனிடம் சொல்லி கண்ணீர் வடித்து இருக்கிறார்.
இது சந்தோஷ் குமாருக்கு தெரிய வந்ததும் மஞ்சுளாவை அடித்து உதைத்து இருக்கிறார். நீ அவன்கூட பேசி விட்டாய் அவனுடனேயே போய்விடு என்று வீட்டுக்கு செலவிற்கும் பணம் கொடுக்காமல் இருந்திருக்கிறார். இதனால் மஞ்சளாகும் இரண்டு தினங்களாக சமைக்காமல் இருந்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த சந்தோஷ் குமார், மஞ்சுளா சாப்பாடு செய்யாமல் இருந்ததால் சண்டை போட்டு இருக்கிறார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் தடித்து இருக்கிறது. ஆத்திரம் அடைந்த சந்தோஷ் மஞ்சுளாவின் கழுத்தை கைகளால் இறுக்கி கொலை செய்திருக்கிறார்.
மஞ்சுளா இறந்து விட்டதும் துப்பட்டாவால் மின்விசிறியில் மாட்டி தொங்கவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல செய்து இருக்கிறார். அதன் பின்னர் ஸ்ரீ பெரும்புதூருக்கு சென்று பெண் வழக்கறிஞர் ஒருவரை சந்தித்து நடந்தவற்றை சொல்லி இருக்கிறார். அவரின் ஆலோசனையின்படி இன்று காலையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தன்னுடன் தங்கி இருந்த பெண் தற்கொலை செய்து கொண்டு விட்டதாக நாடகமாடி இருக்கிறார். ஆனால் பிரேத பரிசோதனையில் முகம், கழுத்து பகுதியில் நக காயங்கள் இருப்பது தெரியவந்திருக்கிறது. இதை அடுத்து சந்தேகம் மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷை அழைத்து துருவித்துருவி விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.