6வது திருமணம் முடிந்த 15 நாட்களுக்குள் 7வது திருமணம் - கல்யாண ராணி சந்தியா சிக்கிய கதை
அடுத்தடுத்து ஆறு திருமணங்களை செய்து மோசடி செய்து வந்த கல்யாண ராணி சந்தியா, ஏழாவது திருமணத்தின் போது பிடிபட்டிருக்கிறார். ஆறாவது திருமணம் முடிந்த 15 நாட்களுக்குள்ளேயே ஏழாவது திருமணம் செய்த போது வசமாக சிக்கி இருக்கிறார்.
நாமக்கல் மாவட்டத்தில் கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் தனபால். 35 வயதான இந்த வாலிபருக்கு புரோக்கர் மூலமாக மதுரையைச் சேர்ந்த சந்தியா என்கிற 26 வயது இளம் பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது. கடந்த ஏழாம் தேதி திருமணம் நடந்திருக்கிறது. மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்கிற புரோக்கர் தான் இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்திருக்கிறார்.
திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் பெண்ணின் அக்காவும் , மாமாவும் மட்டுமே வந்துள்ளார்கள். அந்த இரண்டு பேரும் திருமணம் முடிந்த கையோடு புரோக்கருடன் புறப்பட்டு இருக்கிறார்கள். திருமணம் முடிந்ததுமே புரோக்கர் 1.50 லட்சம் ரூபாய் கமிஷன் வாங்கிச் சென்றிருக்கிறார். இதன் பின்னர் சந்தியாவுடன் பொது வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார் தனபால்.
ஏழாம் தேதி திருமணம் நடந்த நிலையில் ஒன்பதாம் தேதி காலையில் தனபால் எழுந்து பார்த்த போது சந்தியா வீட்டில் இல்லை. வெளியிடங்களில் தேடியும் இல்லாததால் செல்போனில் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்திருக்கிறது. இதை அடுத்து புரோக்கர் பாலமுருகன், சந்தியாவின் மாமா, அக்கா, புரோக்கர் பாலமுருகன் ஆகியோருக்கு போன் செய்தபோது அவர்களின் செல் ஃபோன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு வந்துள்ளன.
இதனால் சந்தேகமும் வந்தது தனபாலுக்கு. உடனே அவர் வீட்டின் பீரோவில் சென்று பார்த்த போது அதில் இருந்த கல்யாண பட்டுப் புடவை, நகைகள் தான் கொண்டு வந்த துணிகளை எடுத்துக் கொண்டு சந்தியா மாயமானது தெரிய வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த தனபால் போலீசில் புகார் அளித்துள்ளார் .
போலீசார் விசாரணை நடத்தி வந்தபோது வேறொரு நபருக்கு திருமணத்திற்காக பெண் பார்த்தபோது மதுரையைச் சேர்ந்த தனலட்சுமி என்ற புரோக்கர் மூலம் சந்தியாவின் போட்டோ வந்திருக்கிறது. அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தனபால் தன்னை ஏமாற்றியவர்களை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று திட்டம் போட்டுள்ளார். அதன்படி உறவினர்களை துணைக்கு அழைத்துக் கொண்டு வேறொரு நபருக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று பேசி இருக்கிறார்.
போட்டோக்களை மட்டும் பார்த்து போனிலேயே திருமண நிச்சயதார்த்தம் செய்து நேற்று காலையில் திருச்செங்கோட்டில் திருமணம் நடப்பதாக முடிவு எடுத்து உள்ளார்கள். அதன்படி சந்தியா திருச்செங்கோடு சென்றிருக்கிறார். சந்தியாவுடன் அவரது அக்கா, மாமா என்று சொல்லிக் கொண்டவரும் புரோக்கரும் சென்றுள்ளனர்.
அப்போது தனபாலும் அவரது உறவினர்களும் எதிரே வந்து நின்று இருக்கிறார்கள். இதை பார்த்த சந்தியாவுக்கு அதிர்ச்சி. அவரை அப்படியே பிடித்துக் கொண்டு போய் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் சந்தியாவுக்கு ஏற்கனவே ஆறுமுறை திருமணம் நடந்து இருக்கிறது என்ற தகவலை கேட்டு தனபால் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதை அடுத்து சந்தியா அவரது கூட்டாளிகளையும் கைது செய்துள்ளனர் போலீசார். ஆறாவது திருமணம் முடிந்து 15 நாட்களுக்குள்ளேயே ஏழாவது திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட சந்தியாவின் செயல் பரபரப்பபை ஏற்படுத்தி இருக்கிறது.