‘தம்பியை அடித்தே கொன்றான்... நான் பார்த்தேன்’ கள்ளக்காதலியின் 4 வயது சிறுவனை கொலை

சேலத்தில் கள்ளக்காதலியின் 4 வயது சிறுவனை சுவற்றில் அடித்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் கிச்சிப்பாளையம் காளிக்கவுண்டர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (22). கூலித்தொழிலாளியான இவருக்கும் அம்பாள் ஏரி ரோட்டை சேர்ந்த சண்முகப்பிரியா(23) என்ற பெண்ணுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது. இப்பெண், பசுபதி என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு 6 வயது மற்றும் 4 வயதில் 2 மகன்கள் உள்ளனர். கணவரை விட்டு பிரிந்த சண்முகப்பிரியா , குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த நிலையில் தமிழரசனுடன் கள்ளக்காதல் ஏற்பட்டு , கடந்த 6 மாதமாக ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, டூவீலரில் இருந்து மகன் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டுவிட்டதாக கூறி 4 வயது மகனை தாய் சண்முகப்ரியா சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தார். அச்சிறுவன் சுயநினைவு இல்லாமல் இருந்தான். இதனால் அவர்களின் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசுக்கு தெரிவித்தனர். அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் கண்ணன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் தகாத உறவு காதலன் தமிழரசனை பிடித்து விசாரித்தபோது பரபரப்பு தகவல்கள் வெளியானது. தமிழரசனும், சண்முகப்பிரியாவும் நெருக்கமாக பேசிக்கொண்டிருக்கும் போது, அச்சிறுவன் தொடர்ந்து அழுததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த தமிழரசன், அச்சிறுவனை பிடித்து சுவற்றில் அடித்துள்ளார். இதில் மயங்கி கீழே விழுந்த சிறுவன் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கள்ளக் காதலர்கள், சிறுவன் விபத்தில் விழுந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதித்தது தெரியவந்தது. மயக்க நிலையில் இருந்து வந்த சிறுவன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
முன்னதாக தமிழரசன் மீது கொலை முயற்சி வழக்கும், தாய் சண்முகப்பிரியா மீது தகவலை மறைத்ததாகவும் வழக்கு பதிவு செய்த போலீசார், தமிழரசனை கைது கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான தாய் சண்முகப்பிரியாவை தேடி வருகின்றனர். இந்நிலையில், சிறுவன் இறந்து போனதால் தமிழரசன் மீது கொலை வழக்காக மாற்றி தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.