ஆன்லைன் ரம்மியால் நடந்த விபரீதம்: தாய் , மகன் விஷம் குடித்து தற்கொலை!?

 

ஆன்லைன் ரம்மியால் நடந்த விபரீதம்: தாய் , மகன் விஷம் குடித்து தற்கொலை!?

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பண்ருட்டி: ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலாப்பாளையத்தைச் சேர்ந்தவர் சிற்றரசு. இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும் அருள்வேல் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அருள்வேலுக்கும்  திவ்யா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

rummy

அருள்வேலும் திவ்யாவும் சென்னையில் ஐடி ஊழியர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். அருள்வேலுக்கு ஆன்லைனில் ரம்மி ஆடும் பழக்கம் இருந்துள்ளது. நாளடைவில் அவர் அதற்கு அடிமையாக மாறியுள்ளார். இதனால் தான் சம்பாதிக்கும் பணம் மட்டுமல்லாது நண்பர்களிடம் கடன் வாங்கியும் ரம்மி ஆடி வந்துள்ளார். இதில் அவருக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் கொடுத்தவர்கள்  கடனை திருப்பி கேட்க, மனைவி மற்றும் குழந்தையைச் சென்னையிலேயே விட்டுவிட்டு சொந்த ஊரான பண்ருட்டிக்குச் சென்றுள்ளார்.

rummy

இருப்பினும்  கடன் கொடுத்தவர்கள் அங்கேயும் வந்து அவரிடம் கடனை திரும்பி தருமாறு கேட்டு தகராறு செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த அருள்வேல் தாய் ராஜலட்சுமியிடம் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறியுள்ளார். இதற்கு அவர் தானும் உன்னுடன் செத்து விடுகிறேன் என்று கூறியதாகத் தெரிகிறது. 

suicide

இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி, தானும் மகனும்  விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய சிற்றரசு மகனும், மனைவியும் மயங்கிக் கிடப்பதைக் கண்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதையடுத்து ராஜலட்சுமி மகனுக்கு ஏற்பட்ட கடனை குறித்து எழுதி வைத்த கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. ஆன்லைன் சூதாட்டத்தால் தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.