தமிழ் வளர்ச்சிக்காக தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் – அரசுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்!

 

தமிழ் வளர்ச்சிக்காக தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் – அரசுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்!

செம்மொழியான நம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு தனி அமைச்சகத்தை உருவாக்கவேண்டுமென தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடுமையான முயற்சிகளுக்குப் பின் 2004 ஆம் ஆண்டு செம்மொழி என்னும் அங்கீகாரத்தைப் பற்றிப் தமிழ்மொழி. பரிதிமாற்கலைஞர் போன்ற தமிழறிஞர்கள் தொடங்கிய இந்த போராட்டத்தில் இறுதி வெற்றியை ஈட்டித் தந்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். செம்மொழியான தருணத்தை அனைவருமே கொண்டாடினோம். செம்மொழி அறிவிப்பு வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் என்னவெல்லாம் செய்து இருக்கிறோம் என கறாராக தொகுத்துப் பார்த்தால் பெரிதாக ஒன்றும் இல்லை. ஒரு வழக்கில் தமிழ்மொழி வளர்ச்சிக்கு என தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என உயர் நீதிமன்றமே கண்டித்தது நினைவிருக்கலாம்.

தமிழ் வளர்ச்சிக்காக தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் – அரசுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்!

இளமையில் திராவிட தலைவர்களால் ஈர்க்கப்பட்டு இந்தி எதிர்ப்பாளன் ஆனேன். பிற்பாடு இந்தி படங்களில் நடித்தேன். அது தொழிலுக்காக. பல மொழிகளில் நடித்த பிறகுதான் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்பதை முழுதாக உணர்ந்தேன். தமிழ் வாழ்க என உரக்கச் சொல்ல வேண்டும். சொல்வதோடு நிறுத்திக் விடக்கூடாது. செயலிலும் காட்ட வேண்டும். இல்லையெனில் பழம்பெரும் மட்டும் பேசும் வாய்ச்சொல் வீரர்கள் என வரலாறு நம்மை பழித்துவிடும்.

ஆங்கிலத்தைத் தவிர பிற மொழிகள் ஆபத்தில் உள்ளன. தினம்தோறும் மொழிகள் செத்துக் கொண்டிருக்கின்றன. சாகாவரம் பெற்ற தமிழே தடுமாறிக் கொண்டிருக்கிறது. சீன மொழியை கற்றுக்கொள்ள உலகமெங்கும் 500க்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஆங்கிலத்தை கற்க பிரிட்டிஷ் கவுன்சில், ஜெர்மன் மொழியைப் பயிற்றுவிக்க கோத்தே சென்ரம், பிரெஞ்சு மொழி கற்க அலையன்ஸ் பிராஞ்ச்சே என அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கும் பல அமைப்புகள் உள்ளன. உலக மொழிகளை பார்ப்பானேன். இந்தியைப் பரப்பவும் கற்றுக்கொடுக்கவும் இந்தி பிரச்சா சபா மிக தீவிரமாக இயங்கி வருகிறது. ஆனால் தமிழை முறையாகக் கற்று அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற இன்னும் ஒரு அமைப்பு இங்கே ஏற்படுத்தப்படவில்லை. உலகின் எந்த மூலையில் வசிக்கும் எந்த ஒரு நாட்டை சேர்ந்தவரும் தமிழை கற்றுக் கொள்ள நெறிப்படுத்தப்பட்ட பாடத்திட்டமும் தேர்வு முறையும் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் படிப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.

தமிழ் வளர்ச்சிக்காக தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் – அரசுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்!

பிற 60 துறைகளுடன் ஒத்துழைத்து நிகழவேண்டிய தமிழ் ஆய்வுகளை முடுக்கி விடுவது, அறிஞர்களையும் பண்பாட்டு ஆளுமைகளையும் அங்கீகரிப்பது, அச்சில் இல்லாத நூல்களை அகராதிகளை மறுபதிப்பு செய்வது, தமிழின் மகத்தான படைப்புகளை பிற மொழிகளுக்கு கொண்டு சேர்ப்பது, தமிழை வழக்காடு மொழியாக மாற்றுவது, 1956-ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி தமிழை முழுமையான ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்துவது, தமிழ் கற்றவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்குவது, உலகின் முக்கியமான பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை உருவாக்கி ஆய்வுகளை மேற்கொள்ள செய்வது, தமிழகத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் தமிழை ஒரு பாடமாக பயிற்றுவிப்பது, தமிழ்நாட்டின் அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளும் தமிழும் இடம்பெறுவது, உலகத் தரத்திலான நூலகங்கள் ஒவ்வொரு நகரிலும் அமைப்பது என பற்பல பணியில் இன்னுமும் முடுக்கி விடப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளன.

இங்கு நான் சுட்டி இருப்பவை செய்த முடித்தாக வேண்டிய இமாலய பணிகளின் சிறு முனைகள் தான். இவை போன்ற பெரும் முயற்சிகளை தனி கவனம் செலுத்தி மேற்கொள்ள தமிழ் மொழிக்கென தனி அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும். தவிர நம் மொழியின் மீது பண்பாட்டின் மீதும் தாக்குதலும் திரிபுகளும் நிகழ்கிற காலகட்டத்தில் தனி அமைச்சகம் என்பது இன்னமும் பொருத்தப்பாடு மிகத் ஆகிறது. மொழி அரசியலை முன்வைத்து ஆட்சிக்கட்டிலை கைப்பற்றியவர்களுக்கு தமிழ்மொழியை அரியணை ஏற்றும் கடமையும் பொறுப்பும் உண்டு. தற்போது தொழில் துறை அமைச்சரிடம் தமிழ் ஆட்சிமொழி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. தொழில் துறை அமைச்சரின் முதன்மையான அக்கறையும் உழைப்பும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி ஆகத்தான் இருக்க முடியும். அத்துறை பணிச்சுமை மிக்க ஒன்று. அதனுடன் தமிழ் ஆட்சி மொழி தமிழ் கலாச்சாரம் தொழில்துறை போன்ற தமிழ் வரலாற்றை காக்க வேண்டிய மூன்று முக்கிய பொறுப்பு களையும் சேர்ப்பது நிச்சயம் கூடுதல் சுமைதான். தங்கம் தென்னரசு அவர்கள் தொழில்துறை அமைச்சராக தான் அனைவராலும் கருதப் படுகிறார். தமிழ் மொழி ஆட்சி அமைச்சராக அல்ல.

தமிழ் மொழிக்கு என தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டியதும் தமிழ் வளர்ச்சிக்கான அதிகளவில் நிதி ஒதுக்கீடு தீவிரமாக பணியாற்ற வேண்டியது நம்முடைய வரலாற்றுக் கடமை. நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தமிழக முதல்வர் இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என உலகத் தாய்மொழி தினத்தில் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.