‘நெல் கொள்முதல் மையங்களில் திடீர் ஆய்வு செய்க’ – நீதிமன்றம் உத்தரவு
நெற்பயிர்களை கொள்முதல் செய்யும் மையங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீரென ஆய்வு செய்யுமாறு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்த போது, கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால், பருவம் தவறி பெய்த கனமழையில் நெற்பயிர்கள் நனைந்து முளைத்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதனையடுத்து, நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் நடைபெற்றது. அப்போது, ஏற்கனவே அளந்த மூட்டைகளை மீண்டும் அளந்து ஒரு மூட்டைக்கு ரூ.40 அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
இது தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள், சம்பளத்தை மீறி அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சைக்கு சமம் என கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில், விவசாயிகளை காக்க தமிழகம் முழுவதும் போதுமான நெல் கொள்முதல் அமைக்க உத்தரவிடக்கோரி சூரிய பிரகாசம் என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மயிலாடுதுறை போன்று அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் இயன்றளவு லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.