“கேன்சராக இருக்குமோ” … உடல் எடை குறைந்ததால் பயத்தில் தற்கொலை செய்து கொண்ட நீதிமன்ற ஊழியர்!
தனக்கு கேன்சர் வந்துவிட்டதாக நினைத்து நீதிமன்ற ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் சிறப்பு நீதிமன்றத்தில் கீழ்பெரம்பலூரை சேர்ந்த நெடுஞ்செழியன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். அங்கு நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த இவர் கோப்புகளை இடமாற்றி வைப்பதாக கூறி தனது அறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் நெடுஞ்செழியன் வராததால் அங்கு சென்று பார்த்த போது, நெடுஞ்செழியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து அரியலூர் காவல்துறைக்கு தகவல் அளித்த நிலையில் நெடுஞ்செழியன் உடலை கைப்பற்றிய போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது சடலத்துடன் கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
அதில், 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது . பல முறை தனக்கு தேவையான சிகிச்சைகளை நீதிமன்றம் செய்து தந்துள்ளது . கொரோனா நேரத்திலும் நீதிமன்றம் எனக்கு உதவியுள்ளது. ஆனாலும் எனது எடை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் தனக்கு கேன்சர் இருப்பதாக சந்தேகமாக உள்ளது. எனக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.