சொத்து தகராறில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை.. 2 குழந்தைகள் கவலைக்கிடம்…

 

சொத்து தகராறில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை.. 2 குழந்தைகள் கவலைக்கிடம்…

சேலம்

ஆத்தூர் அருகே சொத்து தகராறில் இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு, தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த புங்கவாடி கிழக்கு காட்டுக் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். நெல் அறுவடை இயந்திர ஓட்டுனர். இவருக்கு, சத்யா என்ற மனைவியும், அபினயா (12) மற்றும் சங்கீத்(11) ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர். வேல்முருகன் தனது தந்தைக்கு சொந்தமான தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இதனிடையே வேல்முருகன் காதல் திருமணம் செய்து கொண்டதால், அவரது தாயார் தனலட்சுமி சொத்தில் பங்கு தர முடியாது என கூறியுள்ளார். இதுதொடர்பாக தனலட்சுமி மற்றும் சத்யாவிற்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, சத்யாவை, தனலெட்சுமி மற்றும் அவரது 2-வது மருமகள் ராஜாமணி ஆகியோர் தகாத வார்த்தைகளை திட்டி சண்டையிட்டதாக கூறப்படுகிறது.

சொத்து தகராறில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை.. 2 குழந்தைகள் கவலைக்கிடம்…

இதனால் மனமுடைந்த வேல்முருகன் மற்றும் சத்யா தம்பதியினர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து உள்ளனர். இதற்காக நேற்றிரவு குழந்தைகளை அழைத்துக்கொண்டு மஞ்சினி பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு தம்பதியினர் இருவரும் விஷத்தை குடித்துவிட்டு, குழந்தைகளும் ஊற்றி கொலை செய்ய முயன்றனர். இதில் சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து குழந்தைகள் போன் மூலம் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மயங்கி கிடந்த வேல்முருகன் மற்றும் குழந்தைகளை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வேல்முருகன் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தைகள் இருவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.