வனப்பகுதியில் வெடித்த நாட்டு வெடிகுண்டு… உடல் சிதறி இறந்த ரவுடி, போலீஸ்காரர்… பழிக்குபழி கொலையை தடுக்க முயன்றபோது நடந்த பயங்கரம்

 

வனப்பகுதியில் வெடித்த நாட்டு வெடிகுண்டு… உடல் சிதறி இறந்த ரவுடி, போலீஸ்காரர்… பழிக்குபழி கொலையை தடுக்க முயன்றபோது நடந்த பயங்கரம்

பழிக்கு பழியாக கொலை செய்ய திட்டமிட்டிருந்த ரவுடிகளை காவல்துறையினர் வனப்பகுதியில் சுற்றி வளைத்தபோது நாட்டு வெடிகுண்டை வீசியதில் காவலரும், ரவுடியும் உடல் சிதறி உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சையா. இவரது மகன் கண்ணனும் (32), அவரது நண்பரும் 2018ம் ஆண்டில் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்கய குற்றவாளி ஜாமீனில் வந்துள்ளார். இதனை கண்ணனின் சகோதரர் கேள்விப்பட்டுள்ளார். இதையடுத்து, அண்ணனை கொன்றவனை பழிவாங்குவதற்காக கண்ணனின் சகோதரரும், ஏரல் அருகேயுள்ள மேலமங்களகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ரவுடி துரைமுத்து (29) என்பவரும் சேர்ந்து அந்த முக்கிய குற்றவாளியை கொலை செய்வதற்காக திட்டமிட்டு வெள்ளூருக்கு வந்துள்ளனர். இதுகுறித்து டிஎஸ்பி வெங்கடேஷனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து டிஎஸ்பி உத்தரவின் பேரில் காவல்துறையினர் அங்குள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். இதனை அறிந்து கொண்ட துரைமுத்து, மனக்கரை வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து, வனத்தில் புகுந்த காவல்துறையினர், துரைமுத்துவை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது, காவல்துறையினர் மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளார் துரைமுத்து. இதில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய தலைமைக் காவலர் சுப்பிரமணியன் (26) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் துரைமுத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து அவரும் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து முறப்பநாடு இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

உயிரிழந்த காவலரின் உடலையும், படுகாயம் அடைந்த துரைமுத்துவையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே துரைமுத்து உயிரிழந்தார். இந்த சம்பவம் எதிரொலியாக மனக்கரை, ஆழ்வார்கற்குளம், உள்ளிட் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சம்பவ இடத்தை நெல்லை சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநயு, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட சுப்பிரமணியன், பண்டாரவிளை கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை பெரியசாமி. சுப்பிரமணியன், கடந்த 2017-ல் காவல்துறை பணியில் சேர்ந்துள்ளார். சமீபத்தில் தனிப்படை பிரிவில் பணிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. 6 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த துரைமுத்து மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.