கொரோனாவின் கோரதாண்டவம்… கணவன் இறந்தது தெரியாமலேயே மனைவி மரணம்!

 

கொரோனாவின் கோரதாண்டவம்… கணவன் இறந்தது தெரியாமலேயே மனைவி மரணம்!

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கி எடுத்து வருகிறது. பலர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர். முதியவர்களும் குழந்தைகளும் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்படும் நிலையில், வயதான தம்பதிகள் பலர் கொரோனாவால் உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் ஆரணியை சேர்ந்த தம்பதி கொரோனாவால் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவின் கோரதாண்டவம்… கணவன் இறந்தது தெரியாமலேயே மனைவி மரணம்!

ஆரணி அடுத்த பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராதாகிருஷ்ணன்(71). இவரது மனைவி சுந்தரி(65). கடந்த சில நாட்களுக்கு முன்பு ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அவர் சென்னையில் உள்ள அரசு கிங் மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது மனைவி சுந்தரி ஏற்கனவே உடல் நலம் குன்றி இருப்பதால் கணவன் உயிரிழந்ததை அவரது மகள்கள் சுந்தரியிடம் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், சுந்தரிக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவரையும் அவரது மகள்கள் சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கணவன் இறந்தது தெரியாமலேயே சுந்தரி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்களில் உயிரிழந்துள்ளார். சுந்தரி மற்றும் ராதாகிருஷ்ணனின் உடல் சென்னையிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.