தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் பணிகள் தீவிரம் அடைந்து வருகின்றன. கொரோனா காலகட்டத்தில் அரசியல் கூட்டங்களுக்கு அரசு அனுமதித்திருக்கும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தியுள்ளது. அதன் படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கூட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையிலும் அரசியல் பிரமுகர்கள் பலருக்கு கொரோனா உறுதியாகி வருகிறது.

இந்த நிலையில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுகவின் தேர்தல் களப்பணி தீவிரமடைந்திருக்கும் சூழலில், திமுக தலைமை நடத்திய அனைத்து ஆலோசனை கூட்டங்களிலும் கே.என்.நேரு கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.