தீவிர காய்ச்சல்… சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை!
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு திடீர் என்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டு பெங்களூரு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவர்கள் அறிவுரைப்படி, சசிகலா பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சுத்திணறலுடன், இருமல் மற்றும் லேசானா காய்ச்சலும் இருப்பதால் கொரோனா பரிசோதனை செய்யப்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சசிகலா உடல்நலம் குறித்து கருத்து தெரிவித்த ராஜா செந்தூர்பாண்டியன், “சசிகலாவுக்கு கடந்த ஒருவாரமாக காய்ச்சல் இருந்ததாக சிறை நிர்வாகம் தரப்பில் கூறினார்கள். ஆக்சிஜன்அளவு குறைந்ததாகவும் எனக்கு தகவல் தெரிவித்தார்கள். தற்போது சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக பெங்களூரு சிறை நிர்வாகம் கூறியுள்ளது” என தெரிவித்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, இளவரசி, சுதாகர் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து வரும் 27 ஆம் தேதி விடுதலை ஆகவுள்ளார்.