கொரோனா பாதிப்பு… கைவிட்ட பிள்ளைகள்… உயிரை மாய்த்த தந்தை!- மதுரை அதிர்ச்சி

 

கொரோனா பாதிப்பு… கைவிட்ட பிள்ளைகள்… உயிரை மாய்த்த தந்தை!- மதுரை அதிர்ச்சி

பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்ட தந்தை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள அதிர்ச்சி சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (பெயர் மாற்றம்). 60 வயதான இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பெற்ற பிள்ளைகள் அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பியுள்ளனர். எங்கு செல்வது என்று தெரியாமல் அந்த முதியவர் சாலையோரங்களில் சுற்றித்திரிந்துள்ளார். இதனைப் பார்த்த சுகாதாரத்துறையினர், அவருக்கு கொரோனா பரிசோதனை எடுத்ததில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா பாதிப்பு… கைவிட்ட பிள்ளைகள்… உயிரை மாய்த்த தந்தை!- மதுரை அதிர்ச்சி

இதைத் தொடர்ந்து அந்த முதியவர், மதுரையில் உள்ள தனியார் கல்லூரியின் கொரோனா முகாமில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த நிலையில், பெற்ற பிள்ளைகளே கைவிட்டதால் மனவேதனையுடன் இருந்துள்ளார் அந்த முதியவர். இதனிடையே, முகாமில் உள்ள மாடியில் இருந்து முதியவர் குதித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுகாதாரத்துறையினர், அவரை மீட்டு மதுரையில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக முதியவர் உயிரிழந்தார். பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர் மனமுடைந்து மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.