கோவையில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது – முதல்வர் பழனிசாமி

 

கோவையில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது – முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த போது, கொரோனா பரவல் குறைவாக இருந்தது. ஆனால் கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு மேல் ஊரடங்கு நீடித்ததால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. அதனைக் கருத்தில் கொண்ட அரசு, ஊரடங்கைக் கட்டுப்பாடுகளுடன் ஓரளவு தளர்த்தியது. அதனால் நாளொன்றுக்கு 400 முதல் 600 வரையிலேயே அதிகரித்து வந்த பாதிப்பு, பன்மடங்காக அதிகரித்தது. இதன் காரணமாக மீண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது – முதல்வர் பழனிசாமி

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்து வருகிறார். அப்போது, கோவை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவை மாவட்டம் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

தொடர்ந்து அங்கு கொரோனா கட்டுக்குள் இருப்பதாகக் கூறிய முதல்வர், நாளொன்றுக்கு 2000 கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசின் வழிமுறைகளைப் பின்பற்றியதால் கோவையில் கொரோனா பரவல் குறைந்துள்ளதாகவும் கூறினார். மேலும், சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசிடம் நிதி உதவி பெற்றுத் தரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.