இந்தியாவில் ஒரே நாளில் 76,472 பேருக்கு கொரோனா… மரணங்கள் எண்ணிக்கையில் இன்று மெக்சிகோவை முந்துகிறது!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 76 ஆயிரம் பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனாத் தொற்று அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தைப் படிக்க இந்தியா தீவிரமாக முயற்சி செய்து வருவது போன்று தினம் தினம் புதிய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
நேற்று முன்தினம் புதிய உச்சமாக 77,266 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்
எண்ணிக்கை 76,472 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்துள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34,63.973 ஆக உள்ளது. இதில் 7,52,424 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 26,48,99 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 1021 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 62,550 ஆக அதிகரித்துள்ளது. தற்போது உலக அளவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. 63,146 உயிரிழப்புகளுடன் மெக்சிகோ மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் தினமும் உயிரிழப்பு எண்ணிக்கை 1000த்தை கடந்து வருவதால், இன்றைக்கே உயிரிழப்புகள் எண்ணிக்கையிலும் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துவிடும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உலக கொரோனா நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில் முதல் இரண்டு இடத்தைப் பிடிக்கின்றன. அவற்றின் வரைபடம் எல்லாம் இறங்க ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் மட்டும் உயர்ந்துகொண்டே செல்வது கவலையை அளிக்கிறது.