மதுரை மாவட்டத்தில் 7 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு…!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,526 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 79,662 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் சென்னையை காட்டிலும் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று தற்போது வேகம் எடுத்து வருகிறது.
இந்நிலையில் மதுரையில் இன்று மேலும் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,285 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 2,667 ஆக உள்ள நிலையில் 124 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுரையில் 21 நாட்களாக நீடித்த முழு ஊரடங்கு நேற்றிரவுடன் நிறைவடைந்த நிலையில், இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு கொரோனா தாக்கம் தீவிரமடைந்துள்ளது கவனிக்கத்தக்கது.