பைக் வாங்கி தர மறுத்த பெற்றோர்… விரக்தியில் உயிரை மாய்த்த கல்லூரி மாணவர்…

 

பைக் வாங்கி தர மறுத்த பெற்றோர்… விரக்தியில் உயிரை மாய்த்த கல்லூரி மாணவர்…

கோவை

கோவை அருகே பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி தர மறுத்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கோவை மாவட்டம் வடவள்ளி அருகேயுள்ள சோமயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தச்சு தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் முகிலேஸ்வரன் (19). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் முகிலேஸ்வரன், தனக்கு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வாங்கித்தருமாறு பெற்றோரிடம் கேட்டு வந்துள்ளார்.

பைக் வாங்கி தர மறுத்த பெற்றோர்… விரக்தியில் உயிரை மாய்த்த கல்லூரி மாணவர்…

ஆனால், பணம் இல்லாததால் பின்னர் வாங்கித் தருவதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக முகிலேஸ்வரன் மனமுடைந்து காணப்பட்டு உள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய கிருஷ்ணமூர்த்தி மகன் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், இதுகுறித்து அவர் வடவள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.