திருமணம் நிச்சயமான கல்லூரி பேராசிரியை தூக்கிட்டு தற்கொலை… தாய் கண்டித்ததால் விபரீத முடிவு!
தூத்துக்
தூத்துக்குடி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட கல்லூரி பேராசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் டேனியல் தெருவை சேர்ந்தவர் செந்தில் முருகன். இவரது மகள் வேளாங்கண்ணி (30). இவர் நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியை ஆக பணிபுரிந்து வந்தார். இவருக்கு, அதே கல்லூரியில் பணிபுரியும் யுவராஜ் என்பவருடன் நிச்சயம் செய்யப்பட்டு, வரும் 9ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், நேற்று காலை வேளாங்கண்ணிக்கும், அவரது தாயருக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதில், மனமுடைந்த வேளாங்கண்ணி தனது அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த நாசரேத் போலீசார், வேளாங்கண்ணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த தற்கொலை சம்பவம் குறித்து செந்தில்முருகன் அளித்த புகாரின் பேரில், நாசரேத் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் நடைபெற 2 நாட்களில் பேராசிரியை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.