சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடிப்படையில் கல்லூரி இறுதிப் பருவத் தேர்வு! – கே.பி.அன்பழகன் உறுதி
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் கல்லூரி இறுதிப் பருவத் தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கல்லூரிகளில் இறுதிப் பருவத் தேர்வு தவிர்த்து மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இறுதிப் பருவத் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்று மாநிலங்கள் வலியுறுத்தின. ஆனால், இதற்கு பல்கலைக் கழக மானியக் குழு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இறுதிப் பருவத் தேர்வு
கட்டாயம் நடைபெற வேண்டும், கொரோனா பரவல் காரணமாக பல்கலைக் கழக மானியக் குழுவிடம் கூடுதல் அவகாசம் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் இறுதிப் பருவத் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இது குறித்து தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில், “உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி கல்லூரி, பல்கலைக் கழக இறுதித் தேர்வுகள் நடத்தப்படும். எப்போது தேர்வு நடத்துவது என்பது பற்றி ஆலோசனை நடந்து வருகிறது. இதன் அடிப்படையில் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
புதிய கல்விக் கொள்கையை ஆராய உயர் கல்வித் துறை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இன்னும் ஒரு சில தினங்களில் அது தொடர்பான முழுமையான அறிவிப்பு வெளியாகும்” என்றார்.