கோவை அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் கருப்புபேட்ஜ் அணிந்து போராட்டம்!

 

கோவை அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் கருப்புபேட்ஜ் அணிந்து போராட்டம்!

கோவை

சம்பள உயர்வு கோரி கோவை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் நேற்று கருப்பு பட்டை அணிந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு ரூ.70 ஆயிரம் வரை மாதம் சம்பளம் வழங்கப்படுவதாகவும், அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர்களுக்கு அதில் பாதி கூட கிடைப்பதில்லை என தெரிவித்தனர்.

கோவை அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் கருப்புபேட்ஜ் அணிந்து போராட்டம்!

மேலும், எம்.பி.பி.எஸ் முடித்து விட்டு பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம் தான் வழங்கப்படுவதாக குறிப்பிட்ட பயிற்சி மருத்துவர்கள், இதனை ரூ.30 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதேபோல், மாத உதவித் தொகையையும் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த பயிற்சி மருத்துவர்கள், நாட்டிலேயே தமிழகத்தில் தான் குறைவாக சம்பளம் தரப்படுவதாகவும், இதனை ஆண்டுதோறும் 10 சதவீதம் அதிகரித்து தர வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர்.

தங்களது கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிக்கும் விதமாக ஓய்வு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்த அவர்கள், மருத்துவமனையில் வழக்கம்போல் பயிற்சி மருத்துவர்கள் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இதனிடையே, பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.