பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவிக் கொண்டிருப்பதால், முன்னில்லாத அளவுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால், தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளது. இச்சூழலை பயன்படுத்திக் கொண்ட சீரம் நிறுவனம், கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை இரு மடங்காக உயர்த்தியது.
மத்திய அரசுக்கு ரூ.150க்கும் மாநில அரசுகளுக்கு ரூ.400க்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600க்கும் விற்பனை செய்யப்படுமென அறிவித்தது. இது மாநில அரசுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு மாநில முதல்வர்கள் தடுப்பூசியை இலவசமாக விநியோகம் செய்யுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தனர். அதையேற்றுக் கொண்ட மத்திய அரசு, சீரம் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்படுமென உறுதியளித்தது.
இந்த நிலையில், தடுப்பூசி விலை உயர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கொரனோ தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். மத்திய அரசு கொள்முதல் செய்யும் விலையிலிருந்து தற்போதைய விலை உயர்வு மாறுபட்டதாக உள்ளது. இது மாநில அரசுகளுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், 18 – 45 வயதுக்கு உட்பட்டோருக்கு தேவையான தடுப்பூசிகளை விரைவில் வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார் .