சிந்தியா ஆதரவாளர்களுக்கு யோகம்… இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யும் ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இன்று தனது அமைச்சரவை விரிவாக்கம் செய்கிறார். ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள் 2 பேர் இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்.
மத்திய பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதத்தில், ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்.எல்.ஏ.களுடன் காங்கிரசிலிருந்து வெளியேறி பா.ஜ.க.வில் இணைந்தார். இதனால் முன்னாள் முதல்வர் கமல் நாத் தலைமையிலான அரசு கவிழந்தது. இதனையடுத்து அம்மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது. சிவ்ராஜ் சிங் சவுகான் நான்காவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த மார்ச் முதல் இதுவரை சிவ்ராஜ் சிங் சவுகான் தனது அமைச்சரவை 2 முறை விரிவாக்கம் செய்துள்ளார்.
தற்போது மத்திய பிரதேச அமைச்சரவையில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உள்பட மொத்தம் 29 பேர் உள்ளனர். அம்மாநிலத்தில் அதிகபட்சம் 35 பேர் அமைச்சராக இருக்கலாம். இந்த சூழ்நிலையில் இன்று முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் 3வது முறையாக தனது அமைச்சரவை விரிவாக்கம் செய்ய உள்ளார். ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் துளசிராம் சிலாவாத் மற்றும் கோவிந்த் சிங் ராஜ்புத் ஆகியோர் இன்று மத்திய பிரதேச அமைச்சரவையில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்.
ஏனென்றால் அவர்கள் இருவரும் சிவ்ராஜ்சிங் சவுகானின் அமைச்சரவையில் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள். இடைத்தேர்தல் தாமதமானதால் அவர்கள் தங்களது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தனர். தற்போது இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆகையால் அவர்கள் இருவரும் இன்று மாநில அமைச்சர்களாக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக தகவல். அதேசமயம் இன்று யார் யார் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர் என்பது குறித்த உறுதியான தகவல் கிடைக்கவில்லை. கவர்னர் மாளிகையில் இன்று மதியம் 12.30 மணிக்கு அமைச்சர்களின் பதவி பிரமாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.