முறையாக செல்வோருக்கு இ-பாஸ் வேகமாக வழங்க நடவடிக்கை : முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் கொரோனா சற்று வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் அவற்றை இன்னும் சில காலத்திற்குள் கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று தமிழக அரசு உறுதிபட தெரிவித்து வருகிறது. இருப்பினும் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல தொடர்ந்து இ பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. இ -பாஸ் நடைமுறை அமலில் இருந்தாலும் அதை விண்ணப்பித்து பெறுவதில் பெரும் சிரமம் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் இந்த இ-பாஸ் நடைமுறையை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பணம் பிடுங்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இ பாஸ் 500 முதல் 5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பலரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அதே சமயம் வெளி மாநிலத் தொழிலாளர்களை தமிழகத்திற்கு அழைத்து வந்து நிறுவனத்தில் பணி செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் தெரிவித்து இருந்தார். ஆனால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் ஒருவேளை தொற்று உறுதியாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனமே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் வெளி மாநிலத் தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு உடனடியாக இ பாஸ் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் இந்தியாவிலேயே அதிக முதலீடு எடுத்த மாநிலம் தமிழ்நாடு என்று கூறியுள்ள முதல்வர் பழனிசாமி முறையாக செல்வோருக்கு இ-பாஸ் வேகமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.