முதல்வர் எடப்பாடியின் ’ஹாட்ரிக் சாதனை’ – அசத்தும் தமிழக அரசு
பிரபல ஊடக நிறுவனமான ’இந்தியா டுடே’ வருடம்தோறும் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டு அதன் அடிப்படையில் சிறந்து விளங்கும் மாநிலத்தை தேர்வு செய்து பரிசு வழங்கி கௌரவித்து வருகிறது. தொழில், வேலை வாய்ப்பு, வணிகம், மக்களின் வாழ்க்கைத் தரம் உள்ளிட்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்து இவ்வாறு விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2020 ஆம் ஆண்டிற்கான பெரிய மாநிலங்களுக்கான, விருதை தமிழகம் பெற்றுள்ளது. இந்த விருதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தொடர்ந்து 2018 முதல் 2020 வரை மூன்றாவது முறையாக பெற்று, ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது.
இந்த ஆய்வில் தமிழகம் 1263.1 மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ’விஷன் தமிழ்நாடு 2023’ என்கிற தொலைநோக்கு திட்டத்தின் அடிப்படையிலேயே இன்றைய தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அதிலும் முதல்வர் பழனிச்சாமியின் அறிவார்ந்த விரைவான செயல்பாடுகள் தமிழகத்திற்கு இந்த பெருமை கிடைக்க முக்கியக் காரணமாகும். தொழில்துறை வளர்ச்சியில் முதல்வர் காட்டிவரும் தனிப்பட்ட அக்கறை, பல ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளை தமிழகத்தின் பக்கம் ஈர்த்துள்ளது. தொழில் செய்வதற்கு உகந்த சூழலை தமிழக அரசு ஏற்படுத்தியிருப்பதாக அந்தத் துறையினர் பாராட்டு தெரிவிக்கின்றனர்.
அது மட்டுமா?
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் சராசரிக்கும் அதிகமாக பொருளாதார வளர்ச்சியை தக்கவைத்து சாதனை புரிந்திருக்கிறது எடப்பாடி அரசு. அதேபோல தனிநபர் வருமானத்தை ரூபாய் 1 லட்சத்து 53 ஆயிரத்து 853 ஆக உயர்த்தியதன் மூலம் கடந்த ஆண்டு 12வது இடத்தில் இருந்த தமிழகம் நிகழாண்டில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுடன் சமூக நீதியையும், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதையும் தமிழக அரசு குறிக்கோள்களாகக் கொண்டு செயல்பட்டு வருவதாக ’இந்தியா டுடே’ புகழாரம் சூட்டியுள்ளது.
மனித மேம்பாடு குறியீட்டில் சிறந்த இடம், குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவு, ஊட்டச் சத்து குறைபாடு விகிதம் குறைவு என இந்தியாவின் மற்ற எல்லா மாநிலங்களை விட தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது. இந்த பின்னணியிலேயே தமிழகத்திற்கு மூன்றாவது முறையாக முதலிடம் வழங்கியிருக்கிறது இந்தியா டுடே.
மாபெரும் இந்த கௌரவத்தை தனக்குக் கிடைத்த அணிகலனாக முதல்வர் எடப்பாடி கருதவில்லை. ’’அரசு அதிகாரிகள், பணியாளர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பாலும், தமிழக மக்களின் ஒத்துழைப்பாலுமே தொடர்ந்து 3-வது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வாகி சாதனை புரிந்துள்ளது. இவ்விருதினை அனைவருக்கும் அன்போடு சமர்ப்பிக்கிறேன். தொடர்ந்து தமிழக வளர்ச்சிக்கு ஒற்றுமையாக உழைப்போம் என அவர் பரந்த மனதுடன் தெரிவித்துள்ளார். ’வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும், அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்’ என்கிற எம்ஜிஆரின் புகழ்பெற்ற பாடலுக்கு ஏற்ப எடப்பாடியின் இந்த பரந்த மனது அவருக்கும் தமிழகத்திற்கும் மேலும் பல வெற்றிகளைப் பெற்றுத்தரும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.