எக்காரணத்தை கொண்டும் குற்றவாளிகள் தப்பிக்கக்கூடாது! கொந்தளிக்கும் கதாநாயகிகள்

 

எக்காரணத்தை கொண்டும் குற்றவாளிகள் தப்பிக்கக்கூடாது! கொந்தளிக்கும் கதாநாயகிகள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். இவர் கடந்த 20 ஆம் தேதி முழு பொதுமுடக்கம் நடைமுறைகளை மீறி நீண்ட நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் சாத்தான்குளம் போலீசார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனும், ரகுகணேஷ் ஆகிய இருவரும் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் கடுமையாகத் தாக்கியதுடன், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.

எக்காரணத்தை கொண்டும் குற்றவாளிகள் தப்பிக்கக்கூடாது! கொந்தளிக்கும் கதாநாயகிகள்

இதையடுத்து காயம் காரணமாக ஜெயராஜ் மருத்துவச் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்த பென்னிக்ஸ் உயிரிழக்க, ஜெயராஜ் மருத்துவமனையில் பலியானார். போலீசாரின் தாக்குதலால் தான் இரண்டு உயிரிழப்புகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை ஹன்சிகா, “ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸிக்கு நடந்த கொடூரத்தை அறிந்து பதறிப்போனேன். இதில் சம்பந்தப்பட்ட காவலர்கள், காவல்துறையினரையும் இந்தியாவையும் அவமானப்படும்படியாக நடந்துகொண்டுள்ளார்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம். எக்காரணத்தைக் கொண்டும் குற்றவாளிகள் தப்பிக்கக்கூடாது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “சாத்தான்குளம் சம்பவம் பயங்கரமானது. இது உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாத மனிதாபிமானமற்ற செயல். அவர்களுக்கான நீதி தாமதமானால் அது அநீதியானது” என குறிப்பிட்டுள்ளார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார், “சாத்தான்குளம் காவல்துறையினரின் நடத்தையைப் பார்த்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நீதி வேண்டும். இந்த சம்பவத்தை வைத்து நாம் முழு காவல்துறையையும் குறைக்கூற முடியாது. ஆனால் அந்த இரண்டு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

இதேபோல் நடிகை ராஷி கண்ணா, “காவல்துறை உடையில் இருந்த இரக்கமற்றவர்களால் இந்த கொடூரம் நடந்துள்ளது. சட்டத்திற்கு மேல் யாரும் இருக்கக்கூடாது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.