விஜய் சேதுபதியின் அரசியல் குறித்த கேள்வி: அட்டகாசமான பதிலளித்த கமல் ஹாசன்
விஜய் சேதுபதி இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராமில் லைவ்வில் தோன்றி கலந்துரையாடினார்கள். இதில் விஜே அபிஷேக் ராஜாவும் பங்கேற்றார்.
கொரோனா தொற்று காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி போயுள்ளனர். இதனால் திரை பிரபலங்கள் பலரும் மக்களை மகிழ்வித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராமில் லைவ்வில் தோன்றி கலந்துரையாடினார்கள். இதில் விஜே அபிஷேக் ராஜாவும் பங்கேற்றார்.
அப்போது விஜய் சேதுபதி கமல் ஹாசனிடம், அரசியல் கருத்தும் சரி, கடவுள் நம்பிக்கையும் சரி நிறைய படங்களில் பேசியிருக்கிறீர்கள். ஆனால் அரசியலில் ஆர்வம் இருக்கிறது, வரப்போகிறேன் என்று கேள்வியை முடிப்பதற்குள் பதிலளித்த கமல் ஹாசன், “அதைச் சொல்லாமல் இருப்பதுதான் நல்லது. தடுப்பதற்கு நிறையப் பேர் இருப்பார்கள். அது 2001-ல் புரிந்துவிட்டது. அரசியலுக்கு வந்துவிடுவேனோ என்ற சந்தேகத்தில் வைக்கப்பட்ட இடைஞ்சல்கள் கணக்கில் அடங்காது. அதை மீண்டும் சொல்லிக்காட்ட விரும்பவில்லை. ‘விருமாண்டி’ பிரச்சினை எல்லாம் திடீரென்று கிளப்பிவிடப்பட்டது தானே. நிதானமாகக் கோபப்பட வேண்டும் என்று புரிந்துகொண்ட நேரம் அது” என்றார்.
அரசியல் வருகையை இவ்வளவு காலம் தள்ளிப்போட்டதற்கான காரணம் என்ன? என்ற விஜய் சேதுபதியின் கேள்விக்கு, “அதற்கான சூழல். வயது வர வேண்டும். என்ன இவன் வந்துட்டானா என்று சொல்லக்கூடாது. இவர் என்று சொல்கிற வயது வரவேண்டும். அதற்காகக் காத்திருந்தேன். ஒருமையில் பேசுவது ரொம்ப சுலபம் அல்லவா!” என்று கூறியுள்ளார் .