கிறிஸ்துமஸ் ரிலீஸ் சர்ச்சை: உள்குத்து அரசியல் என விஷ்ணு விஷால் கடும் தாக்கு
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.21ம் தேதி தமிழில் 5 திரைப்படங்கள் ரிலீசாகவுள்ளதால் நிலவும் சர்ச்சைக்கு உள்குத்து அரசியல் தான் காரணம் என நடிகர் விஷ்ணு விஷால் சாடியுள்ளார்.
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.21ம் தேதி தமிழில் 5 திரைப்படங்கள் ரிலீசாகவுள்ளதால் நிலவும் சர்ச்சைக்கு உள்குத்து அரசியல் தான் காரணம் என நடிகர் விஷ்ணு விஷால் சாடியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஜெயம் ரவி நடித்த ‘அடங்கமறு’ திரைப்படம் டிச.21ம் தேதி ரிலீசாகும் என்று முதலில் அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’, விஷ்ணு விஷாலின் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய திரைப்படங்கள் லிஸ்ட்டில் இணைந்தன.
இந்நிலையில், கூடுதலாக தனுஷின் ‘மாரி 2’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘கனா’ படங்களும் அதே தேதியில் ரிலீசாகும் என்று அறிவிப்பு வெளியானதால் மற்ற பட தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக குழப்பம் நீடித்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய படங்கள் ரிலீஸ் குழுவின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகை நாட்களில் தயாரிப்பாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப படங்களை ரிலீஸ் செய்யலாம் என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இதனை கடுமையாக சாடியுள்ள நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், விதிகள்.. விதிகள் இல்லை.. விதிகளை சரியாக கடைபிடிப்பவர்களுக்கு இப்படி தான் நீதி கிடைக்குமா? இது எனக்கு முதன்முறை அல்ல. இரண்டாவது முறையாக நடக்கிறது. அப்புறம் எதற்கு விதிகள்? சிஸ்டம் தோற்றுப்போய்விட்டது. உள்குத்து அரசியல். இருக்கட்டும்.. வெளிப்படையான அறிக்கை என்றால் என்னவென்று பிறருக்கு தெரிவிக்கவே இதை சொல்கிறேன். அப்புறம்… டிசம்பர் 21-ல் ‘சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்‘ வெளியாகிறது என தெரிவித்துள்ளார்.
Aftr attending all d TFPC meetings in d last 1 month im pretty sure @VishalKOfficial isn responsible for this situation…like is said #politicswithin 🙂 RULES R ONLY FOR PEOPLE WHO FOLLOW 🙂 https://t.co/tdDH7mGvWm
— VISHNUU VISHAL – VV (@vishnuuvishal) December 7, 2018
மேலும், கடந்த ஒரு மாதத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அனைத்து கூட்டங்களிலும் கலந்து கொண்ட வகையில் சொல்கிறேன். இந்த நிலைக்கு நிச்சயமாக விஷால் காரணமில்லை. ஏற்கெனவே சொன்னதுபோல் எல்லாம் உள்குத்து அரசியல். விதிமுறைகள் என்பது அதை பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே’ எனவும் கூறியுள்ளார்.