16 நிறுவனங்கள்… ரூ.5.137 கோடி முதலீடு… 6,555 பேருக்கு வேலைவாய்ப்பு!‍‍- முதல்வர் பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

 

16 நிறுவனங்கள்… ரூ.5.137 கோடி முதலீடு… 6,555 பேருக்கு வேலைவாய்ப்பு!‍‍- முதல்வர் பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழகத்தில் 16 நிறுவனங்கள் ரூ.5,137 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இக்கட்டான கொரோனா தொற்று சூழ்நிலையில் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தற்போது தமிழகத்தில் 16 புதிய தொழில் திட்டங்களை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன. இத்திட்டங்கள் மூலம் ரூ.5,137 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 6,555 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அதன் விவரம்:

* செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரியில் ரூ.2,300 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ‘அதானி என்டர்பிரைசஸ்’ நிறுவனத்தின், தகவல் தரவு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

* காஞ்சிபுரம் மாவட்டம், ‘சிப்காட்’ வல்லம் வடகால் தொழிற்பூங்காவில் ‘சூப்பர் ஆட்டோ போர்ஜ்’ நிறுவனம் ரூ.500 கோடி முதலீட்டில் 800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ‘போர்ஜ்ட் ஸ்டீல்’ மற்றும் அலுமினியம் உதிரிபாகம் உற்பத்தி.

* ‘சிப்காட்’ வல்லம் வடகால் தொழிற்பூங்காவில் உள்ள ஏர்புளோ எண்டர்பிரைசஸ் நிறுவனம் ரூ.320 கோடி முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்புக்கான போக்குவரத்து உபகரணங்கள் உற்பத்தி.

16 நிறுவனங்கள்… ரூ.5.137 கோடி முதலீடு… 6,555 பேருக்கு வேலைவாய்ப்பு!‍‍- முதல்வர் பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

* நெல்லை மாவட்டம் ‘சிப்காட்’ கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில் ரூ.250 கோடி முதலீட்டில் 400 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ‘ஏடிசி டையர்ஸ்’ நிறுவனத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டம்.

* செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் அமெரிக்காவின் ‘விஸ்டியான்’ நிறுவனம், மோட்டார் வாகன மின் உதிரி பாகங்கள் உற்பத்தி திறனை அதிகரிக்க ரூ.100 கோடி முதலீட்டு திட்டம்.

* திண்டுக்கல் மாவட்டத்தில் ‘டாப் அனில் மார்கெட்டிங்’ நிறுவனம் ரூ.100 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்புக்கான சேமியா உற்பத்தி திட்டம்.

* செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரியில் ரூ.750 கோடி முதலீட்டில் 100 பேருக்கு வேலை வாய்ப்புக்கான, சிங்கப்பூர் ‘பிரின்சிடான்’ நிறுவனத்தின் தகவல் தரவு மையம் அமைக்கும் திட்டம்.

* ‘பிபிஎல்- எப்டிஏ’ நிறுவனம் ரூ.500 கோடி முதலீட்டில் 300 பேருக்கு வேலைவாய்ப்புக்கான மின்னணு வாகனத்திற்கான ‘லித்தியம் ஐயர்ன் பாட்டரி’ உற்பத்தி செய்யும் திட்டம். இந்நிறுவனம் காஞ்சீபுரம் அல்லது செய்யார் பகுதியில் நிலம் தேர்வு செய்யும்.

 

 

 

* ரூ.150 கோடி முதலீட்டில் 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புக்கான ஸ்ரீவாரு மோட்டார்ஸ் நிறுவனத்தின் மின்சார மோட்டார்சைக்கிள் (இ-பைக்) உற்பத்தி செய்யும் திட்டம்.

வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக, “யாதும் ஊரே“ திட்டத்தை அமெரிக்காவில் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். அதன்படி, அமெரிக்க தொழில் முனைவோர் சங்கத்தின் மூலமாக அமெரிக்க நிறுவனங்களின் 7 தொழில் நுட்ப திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

* ‘கிளவுட் எனேபிளர்ஸ்’ நிறுவனம் ரூ.35 கோடி முதலீட்டில் 150 பேருக்கு வேலைவாய்ப்புக்கான ‘அடனாமஸ் அண்டு கண்டினியஸ் கவர்னன்ஸ் பார் த எண்டர்பிரைஸ் கிளவுட்’ திட்டத்தை சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

* ‘டையர்1 நெட்வொர்க் சொலுசன்ஸ் ஐ.என்.சி.’ நிறுவனம் ரூ.25 கோடி முதலீட்டில் 20 பேருக்கு வேலைவாய்ப்புக்கான சென்னையில் நிறுவும் ‘ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் பவர்ட் புட் அண்டு அக்ரி சப்ளை செயின்’ திட்டம்.

* ‘ஸ்வைர்பே’ நிறுவனம் ரூ.23 கோடி முதலீட்டில் 30 பேருக்கு வேலைவாய்ப்புக்கான சென்னையில் நிறுவும் ‘டிஜிட்டல் பேமென்ஸ்ட்’ திட்டம். ‘பிளெத்தி’ நிறுவனம் ரூ.22 கோடி முதலீட்டில் 20 பேருக்கு வேலைவாய்ப்புக்கான சென்னையில் நிறுவும் ‘டிஜிட்டல் ஹெல்த்’ திட்டம்.

* ‘பிட்வைஸ் அகடமி’ நிறுவனம் ரூ.21 கோடி முதலீட்டில் 100 பேருக்கு வேலைவாய்ப்புக்கான கோவையில் நிறுவும் ‘இலெர்னிங்’ திட்டம்.

* ‘ரேடஸ் டிஜிட்டல்’ (ஹார்மனி ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ்) நிறுவனம் ரூ.21 கோடி முதலீட்டில் 100 பேருக்கு வேலைவாய்ப்புக்கான சென்னையில் நிறுவும் ‘பைண்டெக் அண்டு பிட்னஸ் அப்ளிகேஷன்ஸ்’ திட்டம்.

* கண்டிநூப் நிறுவனம் ரூ.20 கோடியில் 35 நபர்களுக்கு வேலைவாய்ப்புக்கான ‘சாஸ் பேஸ்ட் எண்டர்பிரைசஸ் ரிஸ்க் ஆடோமேஷன்’ திட்டம், என 16 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் www.investingintamilnadu.com என்ற புதிய இணையதளத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பை முற்றிலும் பூர்த்தி செய்திடும் வகையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.