`ஆசிரியர்கள் ஏளனமாக பார்த்தார்கள்; எடப்பாடி ஐயாவுக்கு நன்றி!;- எஸ்எஸ்எல்சி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் புகழாரம்

 

`ஆசிரியர்கள் ஏளனமாக பார்த்தார்கள்; எடப்பாடி ஐயாவுக்கு நன்றி!;- எஸ்எஸ்எல்சி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் புகழாரம்

பத்தாம் வகுப்பு தேர்வில் தன்னை தேர்ச்சி பெற வைத்த தமிழக முதல்வருக்கு நன்றி என்ற வாசகங்களுடன் மாணவர் ஒருவர் போஸ்டர் அச்சடித்துள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அப்போது நடக்க இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 2 முறை ஒத்திவைக்கப்பட்டு, இறுதியாக ரத்து செய்யப்பட்டது. இதனால் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு கடந்த 10-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் தேர்வு எழுதி இருந்தால் தேர்ச்சியைபெற்றிருக்க முடியாது என நினைத்த மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.

இதனிடையே, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குருங்குடி வடக்கு தெரு பகுதியை சேர்ந்த நிஷாந்த் என்ற மாணவர் தேர்ச்சி பெற்றார். அவர் தனது மகிழ்ச்சியை போஸ்டராக வடிவமைத்து முகநூலில் பதிவேற்றி வெளிப்படுத்தியுள்ளார்.

அதில், ‘10-ம் வகுப்பு தேர்வில் என்னை தேர்ச்சி பெற்றதாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி எனவும், என்னை பார்த்து ஏளனமாக சிரித்த ஆசிரியர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்’ எனவும் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.