10 காவலர்கள்… ஒரு வாலிபர்… சென்னையில் நடுரோட்டில் நடந்த அமர்க்களம்!- அதிர்ச்சி வீடியோ

 

10 காவலர்கள்… ஒரு வாலிபர்… சென்னையில் நடுரோட்டில் நடந்த அமர்க்களம்!- அதிர்ச்சி வீடியோ

நடுரோட்டில் வாலிபர் ஒருவரை பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள், வாகனத்தில் ஏற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் வைராகியுள்ளது. அந்த வாலிபரிடம் காவல்துறையினர் ஏன் இப்படி நடந்து கொண்டார்கள் என்பது குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

10 காவலர்கள்… ஒரு வாலிபர்… சென்னையில் நடுரோட்டில் நடந்த அமர்க்களம்!- அதிர்ச்சி வீடியோ

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், எட்டயபுரம் மற்றும் வி.கே. புதூர் ஆகிய காவல் நிலையங்களில் லாக்அப் டெத் நடந்துள்ளது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகனை அடித்துக் கொன்ற விவகாரம் இந்தியாவை பதறவைத்தது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கையால் பல்வேறு பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் கொந்தளித்து சம்பவத்தை கண்டித்தனர். சமூகவலைதளத்தில் தமிழக காவல்துறையினருக்கு எதிராக பல கருத்துகளை நெட்டிசன்கள் காட்டமாக பதிவு செய்துவருகின்றனர். கொரோனா ஊரடங்கு பணியில் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வந்த காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டி வந்த நிலையில், சாத்தான்குளம் சம்பவம் காவல்துறையினரை தலைகுனிய வைத்துவிட்டது.

சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், “விசாரணைக்கு அழைத்துவருபவர்களை கடிந்துகூட பேசக்கூடாது, அவர்களை அடிப்பது சட்டப்படி குற்றம்” என அறிக்கைவிட்டார். கூடுதல் டிஜிபி ரவி, “இந்தச் சீருடையில் எஜமானர்கள் பொதுமக்கள். ஒருவரை நீங்கள் அடித்தால் ஓட்டுமொத்த பொதுமக்கள் உங்களுக்கு எதிரியாகிவிடுவார்கள். 60 வயதுக்கு மேல் காவல்துறையிலிருப்பவர்களும் பொதுமக்கள்தான்” என்று வீடியோ வெளியிட்டார். தமிழக டி.ஜி.பி திரிபாதி, “காவல் நிலையங்களுக்கு இனி யாரையும் விசாரணைக்கு அழைத்துச் செல்லக்கூடாது” என சுற்றறிக்கையை வெளியிட்டார்.

இவர்களின் இந்த உத்தரவு தற்போது காற்றில் பறந்துள்ளது. சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் போலீஸாருக்கும் இளைஞர் ஒருவருக்கும் நடந்த மல்லுக்கட்டு வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவரை போலீஸார் வலுகட்டாயமாக வாகனத்தில் ஏற்றுகின்றனர். ஆனால் அந்த இளைஞரோ, “நான் ஏன் காவல் நிலையம் வர வேண்டும்” என ஆவேசமாக பேசுகிறார். இந்தக் காட்சியை அவ்வழியாக சென்றவர்களும் போலீஸாரும் செல்போன்களில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோவுக்கும் நெட்டிசன்கள் போலீஸாரை வறுத்தெடுக்க தொடங்கியுள்ளனர். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்று விசாரித்தபோது அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.

10 காவலர்கள்… ஒரு வாலிபர்… சென்னையில் நடுரோட்டில் நடந்த அமர்க்களம்!- அதிர்ச்சி வீடியோ

இது குறித்து போலீஸார் கூறுகையில், “ஊரடங்கு காரணமாக சென்னையில் பல இடங்களில் போலீஸார் சோதனைச் சாவடிகளை அமைத்து வாகன தனிக்கையில் ஈடுபட்டுவருகிறோம். அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி மார்க்கெட் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மற்றும் சில போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போதை இளைஞர், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினார். மேலும் அவர் என்னை மட்டும் ஏன் பிடிக்கிறீர்கள் என்று கூறியப்படி அவ்வழியாக அடையாள அட்டையை கழுத்தில் தொங்கவிட்டு சென்ற பெண் மருத்துவரின் ஐடியை பிடித்து இழுக்க முயன்றார்.

அதனால்தான் அந்த இளைஞரை காவல் நிலையத்துக்கு வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றோம். ஆனால் அவர் பிடிவாதம் செய்து எங்களுடன் மல்லுகட்டினார். அதை சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவேற்றிவிட்டனர். என்ன நடந்தது என்றுகூட தெரியாமல் வீடியோவைப்பார்ப்பவர்கள் கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர். விசாரணைக்குப்பிறகு அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கலாமா என உயரதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடிக்கப்படும்” என்று கூறினர்.