`ராஜஸ்தானில் ஆர்டர்; கொரியரில் வந்த மாஞ்சா நூல்!’- வாலிபர்களை குறிவைத்து விற்ற சென்னை பட்டதாரி சிக்கினார்
சென்னையில் வாலிபர்களை குறித்து வைத்து தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல், பட்டங்களை விற்பனை செய்த பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தானில் ஆர்டர் செய்தவர், கொரியர் மூலம் சென்னை வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கும் சில வாலிபர்கள், ‘கேரம் போர்டு’, பட்டம் விடுதல் உள்ளிட்ட விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பலர் அந்த விளையாட்டுக்குரிய உபகரணங்களை விற்பனை செய்யும் தற்காலிக வியாபாரிகளாக முளைத்துவிட்டனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, காமாராஜர் நகர், புதுநகர் பகுதியைச் சேர்ந்த புள்ளியியல் பட்டதாரியான அன்பரசு (42) என்பவர் மாஞ்சா நூல், பட்டம் விற்பனையாளராக மாறியுள்ளார். இதற்காக அவர் www.patangdoori.com என்ற இணையதள முகவரியில் பட்டங்கள், மாஞ்சா நூல் உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளார். இந்த இணையதளத்தில் மாஞ்சா நூல் தடை உள்ள மாநிலங்களில் விற்பனை செய்யப்படமாட்டாது. மீறி ‘ஆர்டர்’ கேட்டால் அது அவர்களை பொறுத்ததே என எச்சரிக்கையுடன் ஆன்லைன் விற்பனை நடத்துகிறது. இதில், 20 எண்ணிக்கையிலான பட்டங்கள் 1400 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை விற்பனையாகிறது.
மாஞ்சா நூல்கண்டுகள் 1199 ரூபாய் முதல் 2499 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனை அன்பரசு ஆன்லைனில் ஆர்டர் கொடுத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள அந்நிறுவனம் ‘கொரியர்’ வாயிலாக அவருக்கு அனுப்பி உள்ளது. அதனை பெற்று அன்பரசு ஒரு பட்டத்தை 100 ரூபாய்க்கு ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆவடி சரக காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி, ஆய்வாளர் காளிராஜ் தலைமையிலான போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 40,000 ரூபாய் மதிப்பிலான 110 பட்டங்கள், மாஞ்சா நூல்கண்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ”பட்டம் விடுவது தவறல்ல. ஆனால் மாஞ்சா நூலால் பட்டம் விடுவது சட்டப்படி குற்றம்” என்றனர்.