“வாடகைதாரர்களின் மொத்த பயோடேட்டாவும் எங்கட்ட கொடுக்கனும்” – வீட்டு ஓனர்களுக்கு காவல் துறை அதிரடி உத்தரவு!
சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வீட்டு உரிமையாளர்கள், தங்களது வீட்டை வாடகைக்கு விட்ட, 15 நாட்களுக்குள் அருகில் உள்ள காவல் நிலையங்களில், வாடகைதாரர்களின் பெயர், ஒரு புகைப்படம், அவர்களது நிரந்தர முகவரி, ஏற்கனவே வசித்த முகவரி போன்ற விவரங்களை இதற்காக உள்ள விண்ணப்ப மனுக்களில் எழுதி, காவல் நிலையங்களில் அளிக்க வேண்டும்.
வீட்டு உரிமையாளர்கள், வாடகைதாரர்களோடு போடும் ஒப்பந்தம் பற்றி எதுவும் காவல் துறையினருக்கு தெரிவிக்க தேவையில்லை. வாடகைதாரர்கள் பற்றிய தகவல்கள் காவல் நிலையங்களில் ரகசியமாக வைக்கப்படும். இந்த விவரங்கள் காவல் நிலையங்களில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். அந்தந்த பகுதி துணை ஆணையர்கள் அலுவலகங்களிலும், ஆணையர் அலுவலகத்தில் உளவுப்பிரிவு அல்லது குற்ற ஆவண காப்பகத்திலும் இந்த விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைப்பார்கள்.
வெளிமாநிலங்களிலோ அல்லது வெளிநாடுகளில் இருந்து வாடகைக்கு வருபவர்களும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில், வீட்டு உரிமையாளர்கள், தங்களது வீட்டில் வாடகைக்கு குடியிருப்போரின் விவரங்களை காவல் நிலையங்களில் தெரியப்படுத்த வேண்டும் என்ற உத்தரவு ஏற்கனவே அமலில் உள்ளது கவனித்தக்கது.