கொரோனாவால் உயிருக்கு போராடிய இன்ஸ்பெக்டர் : சொந்த செலவில் ரூ. 2.25 லட்சத்துக்கு மருந்து வாங்கி கொடுத்து உதவிய சென்னை கமிஷ்னர் !
தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 1,989 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42,687 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 30,444 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னையில் மட்டும் 585 போலீசார் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தனர். அவர்களில் 253 பேர் பூரண குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர்.
அந்த வகையில் சென்னை மாம்பலம் போலீஸ் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பாலமுரளி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி செல்வதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் கொரோனா தடுப்பூசி சோதனையில் உள்ள ACTEMRA tocilizumab எனும் மருந்தை மருத்துவர்கள் கடைசி கட்ட முயற்சியாக அவரது உடலில் செலுத்திப்பார்க்க பரிந்துரை செய்தனர். இதன் விலை ரூ. 75 ஆயிரமாகும். இதை 3 நாட்கள் உடலில் செலுத்தினால் உயிர்பிழைக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையறிந்த சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் அந்த மருந்தை உடனடியாக இன்ஸ்பெக்டர் பாலமுரளிக்கு செலுத்த ஏற்பாடு செய்ய அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து தனது சொந்த செலவில் ரூ. 2.25 லட்சத்துக்கு மருந்தை பாலமுரளிக்கு காவல் ஆணையர் வாங்கிக் கொடுத்துள்ளார். தற்போது அந்த மருந்து செலுத்தப்பட்ட பின் பாலமுரளி உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தன் கட்டுப்பாட்டில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு காவல் ஆணையர் செய்துள்ள இந்த மாபெரும் உதவி பலரையும் நெகிழ செய்துள்ளது.
ACTEMRA tocilizumab தடுப்பூசியைத்தான் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் சிகிச்சையின் போது அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.