கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சித்த மருத்துவர்கள் கூறினால் அரசு சந்தேகப்படுவது ஏன்? – உயர்நீதிமன்றம்

 

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சித்த மருத்துவர்கள் கூறினால் அரசு சந்தேகப்படுவது ஏன்? – உயர்நீதிமன்றம்

கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிந்துள்ளதாக சித்த மருத்துவர்கள் தெரிவித்தால், அதனை பரிசோதனைக்கு உட்படுத்தாமல், அவர்களை சந்தேக கண்ணுடன் பார்ப்பது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியதாக சித்த மருத்துவர் தணிக்காசலம் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தணிகாச்சலத்தின் தந்தை கலியபெருமாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, நீதிபதிகள் கிருபாகரன் வி.எம் வேலுமணி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தணிக்காசலத்தை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததற்கான காரணம் என்ன என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவர் தன்னிடம் கொரோனா தொற்றுக்கு மருந்து உள்ளது என தெரிவிக்கும் போது, அதை பரிசோதிப்பதை விடுத்து, ஏன் அவரை கைது செய்யவேண்டுமென கேள்வி எழுப்பினர்.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சித்த மருத்துவர்கள் கூறினால் அரசு சந்தேகப்படுவது ஏன்? – உயர்நீதிமன்றம்

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”‘ என்ற குறளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சித்த மருத்துவர்கள் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறினாலே சந்தேகப்படும் சூழல் நிலவுவதாக கவலை தெரிவித்தனர். 60 ஆண்டுகளாக சித்த மருத்துவராக உள்ள டாக்டர் சுப்பிரமணியன் என்பவர், கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிந்ததாக ஆரம்பத்திலேயே தமிழக அரசிடம் தெரிவித்தும், அது புறக்கணிக்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையை அவர் நாடியதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், தற்போது அந்த மருந்து மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்பி
வைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டனர். ஆரம்பத்திலேயே அவரது மருந்தை அரசு பரிசீலனை செய்திருந்தால், இந்நேரம் அந்த மருந்தே கூட வெளி வந்திருக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மத்திய – மாநில அரசுகளால் சித்த மருத்துவத்தின் மீது பாகுபாடு காட்டுவதாகவும், அது புறக்கணிக்கப் படுவதாகவும் தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும்
அலோபதி சிகிச்சை என்ற பெயரில் கபசுர குடிநீர் கொடுத்து சித்த மருத்துவ சிகிச்சை தான் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.