ஆன்லைன் வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா?- சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

 

ஆன்லைன் வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா?- சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க முடியும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்த வழக்கில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு அரசாணை சட்டவிரோதமானது என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் இயங்காவிட்டாலும், அங்கு பணியாற்றும் அனைவருக்கும் தனியார் பள்ளிகள் சம்பளம் வழங்கி வருவதாகவும், தற்போது கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதித்தால்தான் ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும், வழக்கு முடியும் வரை அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா?- சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் ஆசிரியர்களுக்கும் மற்றும் பிற ஊழியர்களுக்கும் ஊதியத்தை முறையாக வழங்க வேண்டுமென்பது அரசின் கொள்கை முடிவாக இருக்கின்ற நிலையில், அரசு உதவி பெறாத பள்ளிகள் கட்டணத்தை வசூலிக்காமல் எப்படி சம்பளத்தை வழங்க முடியுமென கேள்வி எழுப்பினர். ஆன்லைன் வகுப்புகளை பெரும்பாலான பள்ளிகள் தொடங்கிவிட்டு, வகுப்புகளை நடத்த ஆசிரியர்களை கல்வி நிறுவனங்கள் நிர்பந்திக்கும் நிலையில் எப்படி சம்பளம் வழங்காமல் இருக்க முடியுமெனவும் கேள்வி எழுப்பினார். வழக்கு குறித்து தமிழக அரசு ஜூன் 30 பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்