சட்டபேரவைக்குள் குட்கா : உரிமை மீறல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
2017 ஆம் ஆண்டு சட்ட பேரவைக்குள் தமிழகத்தில் குட்கா பொருட்கள் எளிதாக கிடைப்பதாக கூறி திமுக எம்எல்ஏ-க்கள் குட்காவை கொண்டுவந்தனர். தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டமன்றத்துக்கு எடுத்து வந்தது தொடர்பான உரிமை மீறல் குழு திமுக எம்எல்ஏ-க்கள் 21 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்த நிலையில் இதன் இறுதி வாதத்தில் , சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு வந்ததின் நோக்கம் குட்கா எளிதில் கிடைப்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு வருவதற்காக தான். இதனால் சபாநாயகருக்கு எந்த அவமதிப்பும் செய்யவில்லை என்றும் உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பில் வாதிடப்பட்டது.
இந்நிலையில் குட்கா உரிமை மீறல் நோட்டீஸூக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.